”இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்” ஆனால்? உச்ச் கொட்டிக்கொண்டே வாங்கிச்செல்லும் சென்னை மக்கள்
சென்னை: காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்களின் வரத்து குறைவாக இருப்பதால் மீன்களின் விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது
Recommended Video
தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் நிலவி வருவதால் பெரிய வகையிலான விசைப்படகுகள் எதுவும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இருப்பினும் சிறிய அளவிலான பைபர் படகுகள் மட்டுமே கடலுக்குள் சென்று மீன்களை பிடித்து வருவதால் மீன்களின் விலை சற்று ஏற்றத்துடன் காணப்படுகிறது.
காசிமேடை பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ பிரியர்கள் மீன்களை வாங்குவதற்கு ஏராளமாகக் கூடுவது வழக்கம். அதே போன்று இன்றும் மீன்களை வாங்குவதற்காக பலர் கூடியுள்ளனர். பெரிய வகை மீன்கள் குறைவாக காணப்பட்டாலும் சிறிய அளவிலான மீன்களின் விலை சற்று ஏற்றத்துடன் காணப்பட்டு வருகிறது.
கடல் மீன்களை பொருத்தவரை வஞ்சிரம் கிலோ - ரூ.1500, பர்லா கிலோ - ரூ.350, தோல் பாறை கிலோ - ரூ.350, சங்கரா கிலோ - ரூ.500 முதல் 600, கொடுவா கிலோ - ரூ.350 முதல், கோலா கிலோ - ரூ.100 முதல் விற்கப்படுகிறது.
ஆற்று மீன்களின் விலையை எடுத்துக்கொண்டால், கோழி கண்டை மற்றும் ஜிலேபி கிலோ - ரூ.100, இறால் கிலோ - ரூ.150 முதல் - ரூ.800 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெளிமாநில மீன்களை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வரும் மே 15 ஆம் தேதி விடியற்காலை முதல் மீனவர்கள் படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றனர். அதன் பின்னர் மீன்களின் விலை சற்று சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீன்பிடித் தொழில் நஷ்டத்தில் இருப்பதால் மத்திய மாநில அரசுகள் மானிய விலையில் டீசலை வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.