FLASHBACK 2021: தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த பழங்குடியின பெண்.. தேடிச்சென்று கவுரவித்த ஸ்டாலின்
சென்னை: நமக்கு பல வகையில் துன்பங்கள், இன்பங்கள் என்று கொட்டி கொடுத்த 2021-ம் ஆண்டு விடை பெற போகிறது. இந்த வருடத்தில் நாட்டில் எத்தனையோ நல்ல விஷயங்கள், சோக விஷயங்கள் நடந்துள்ளன. இந்த வகையில் இந்த வருடம் தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் நரிக்குறவ சமூகத்தை சேர்ந்த ஒரு பெண். அதனை பற்றி இப்போது காண்போம்.
தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதல் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல் தமிழகத்தில் உள்ள முக்கியமான கோவில்களில் அன்னதானம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கோவிலில் உணவருந்த மறுப்பு
மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தின்படி தினசரி அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த அன்னதானத்தில் கலந்து கொள்வதற்காக மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் வாழும் நரிக்குற சமூகத்தை சேர்ந்த சிலர் சென்றுள்ளனர். ஆனால் அங்குள்ள மக்களுடன் அமர்ந்து அவர்கள் உணவருந்த மறுக்கப்பட்டுள்ளது. இந்த அவலத்தை நரிக்குறவச் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி என்ற பெண் மிகுந்த வேதனையுடன் வீடியோ வாயிலாக வெளியிட்டார்.

அமைச்சர் சேகர்பாபு செய்த செயல்
இந்த நவீன உலகில் இப்படி ஒரு தீண்டான்மையா என்று சமூக வலைத்தளத்தில் பலரும் கேள்வி எழுப்பினார்கள். பழங்குடி பெண்ணின் வேதனை குரல் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் காதுகளுக்கு எட்டியது. இதனை தொடர்ந்து மாமல்லை தலசயனப் பெருமாள் கோயில் வழக்கம்போல் நடந்த அன்னதானத்தில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். அப்போது 'இங்கு சாப்பிடகூடாது' என்று அவமானப்படுத்தப்பட்ட நரிக்குறவச் சமூகத்தைச் சேர்ந்த பெண் அஸ்வினியை அதே கோவிலில் தனது பக்கத்தில் உட்கார வைத்து உணவு அருந்தினார் அமைச்சர் சேகர்பாபு.

முதல்வரின் உத்தரவு
''பூஞ்சேரி பகுதியில் நரிக்குறவர்கள், இருளர்கள் சமூகத்தை சேர்ந்த 81 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை'' என்று தங்களது குறைகளை அமைச்சரிடம் கொட்டி தீர்த்தார் அஸ்வினி. இந்த செய்தி முதல்வர் ஸ்டாலினுக்கு சென்றடைந்தவுடன் பூஞ்சேரி பகுதியில் சாலை அமைத்தல், மின் கம்பம் அமைத்தல், குடிநீர் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அனைத்து மக்களுக்கும் சமமான மதிப்பு அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கவுரவப்படுத்திய முதல்வர் ஸ்டாலின்
இதன் பிறகு கடந்த மாதம் 4-ம் தேதி பூஞ்சேரி பகுதிக்கு நேரடியாக சென்ற முதல்வர் ஸ்டாலின், 81 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கியதுடன், இருளர் இன மக்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். அதனை தொடர்ந்து அஸ்வினியின் வீட்டுக்கே நேரடியாக சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த நரிக்குறவச் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கவுரவப்படுத்தி குறைகளை கேட்டறிந்தார். முதல்வரின் இந்த செயலுக்கு பலதரப்பிலும் பாராட்டுகள் குவிந்தன.
Recommended Video

தமிழகத்தை திருப்பி பார்க்க...
எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாத தனது சமூக மக்களுக்கு அடிப்படை வசதியும் பெற்றுக் கொடுத்து ''நாங்களும் மனிதர்கள்தான்'' என்று தங்களை அவமானப்படுத்தியவர்களுக்கு புரிய வைத்து தமிழகத்தை திருப்பி பார்க்க வைத்துள்ளார் அஸ்வினி. மனிதர்கள் அனைவரும் ஒரே இனம்தான். இதில் எந்த பிரிவினையும் கிடையாது என்று நெற்றிப்பொட்டில் அடித்தார்போல் உரைத்துள்ளார் அஸ்வினி.












Click it and Unblock the Notifications