பிளாஷ்பேக் 2021: கொரோனாவால் கொத்து கொத்தாக நிகழ்ந்த மரணங்கள்...இடுகாட்டில் காத்திருந்த அவலம்
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை 2021 ஆண்டு நாடு முழுவதும் தீவிரமாக வீசியதால் கொத்து கொத்தாக மரணங்கள் நிகழ்ந்தன. பலராலும் மறக்கமுடியாத ஆண்டாக அமைந்து விட்டது.
சென்னை: கொத்து கொத்தாக நிகழ்ந்த மரணங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் மரணத்திற்குக் கூட இறுதி அஞ்சலி செலுத்த நேரமில்லாமல், இடுகாட்டில் புதைக்க இடமில்லாமல் நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. 2021ஆம் ஆண்டு கொரோனா இரண்டாவது அலையால் ஏழை, பணக்காரன் என்றில்லாமல் அனைவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத பல நினைவுகளை ஏற்படுத்தி விட்டது.
கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவியது. 2020ஆம் ஆண்டு முதல் அலை காலத்தில் போடப்பட்ட லாக்டவுனால் அனைவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஆண்டாக அமைந்து விட்டது. பொருளாதார நிலையில் படு சிக்கலை ஏற்படுத்தி விட்டது. உயிரோடு இருப்பதே அதிர்ஷ்டம் என்று மக்களை நினைக்க வைத்து விட்டது கொரோனா.
2021ஆம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் மார்ச் மாதம் மீண்டும் பரவத் தொடங்கியது. டெல்டா,டெல்டா ப்ளஸ் என உருமாறிய வைரஸ் பரவத் தொடங்கியது. மே மாதத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தைக் கடந்தது. தினசரி மரணங்களும் 4 ஆயிரம், 5 ஆயிரம் என தொட்டது. லாக்டவுன் கடுமையாக அமல்படுத்தப்பட்டது.

காத்திருந்த ஆம்புலன்ஸ்கள்
மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. படுக்கை வசதிகள் அனைத்தும் நிரம்பியதால் மருத்துவமனை வாசலில் ஆம்புலன்ஸ்கள் மணிக்கணக்கில் காத்திருந்தன. வராண்டாக்களில் ஆக்சிஜனை சுவாசித்தவாறு மக்கள் காத்திருந்தனர்.

ஆக்சிஜன்,மருந்து தட்டுப்பாடு
ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படவே சிலிண்டர்களுடன் மணிக்கணக்கில் மக்கள் காத்திருந்தனர். அப்பாவிற்காக, மகனுக்காக, மனைவிக்காக, பிள்ளைகளுக்காக என ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் மக்கள் காத்திருந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரெம்டெசிவர் மருந்து வாங்க விடிய விடிய காத்திருந்தனர். மூன்று கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

கொத்து கொத்தாக மரணம்
நன்றாக இருப்பதாக நினைத்த உறவினர்கள் கூட திடீரென மரணமடைந்தனர். ஒரே நாளில் நூற்றுக்கணக்கான சடலங்கள் இடுகாட்டிலும் சுடுகாட்டிலும் வரிசையாக வந்ததால் புதைக்கவும், எரிக்கவும் இடமில்லாமல் ஒரே மைதானத்தில் சடலங்கள் எரிக்கப்பட்டன. 4.75 லட்சம் பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.

மன அழுத்தம்
கங்கை ஆற்றங்கரையில் சடலங்கள் மொத்தமாக புதைக்கப்பட்டன. கங்கை, யமுனை ஆறுகளில் வீசப்பட்ட சடலங்கள் பல ஊர்களில் ஆற்றங்கரையோரங்களில் கரை ஒதுங்கியதால் நாய்கள் இழுத்துச்சென்று கடித்துக் குதறின. பலரும் கொரோனாவால் மன அழுத்தத்திற்கு ஆளாகினர். அவ்வளவுதானா வாழ்க்கை இனி மரணம்தானா என்றெல்லாம் பலரும் நினைத்தனர்.

திறக்கப்பட்ட கோவில்கள்
சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் பலருக்கும் நம்பிக்கை தரும் வகையில் கொரோனா படிப்படியாக குறையத் தொடங்கியது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. கோவில்களில் வார இறுதி நாட்களில் சாமி தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தினசரி பாதிப்பு பத்தாயிரத்திற்கும் கீழே குறையவே மக்கள் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டனர். கோவில்கள் தினசரியும் தரிசனத்திற்காக திறக்கப்பட்டன.
Recommended Video

உருமாறிய வைரஸ்
2021ஆம் ஆண்டுடன் கொரோனாவின் பிடியில் மீண்டு விட்டோம் என்று மக்கள் நினைத்துக்கொண்டிருந்த நிலையில் ஓமிக்ரான் தொற்று பரவத் தொடங்கி விட்டது. ஓமிக்ரான் வைரஸ் பரவல் டெல்டாவை விட அதிக வீரியமாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா வைரஸ் அச்சத்தின் பிடியில் இருந்து மக்கள் மீளாமல் இருப்பதால் அனைவருக்கும் 2021ஆம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக அமைந்து விட்டது.












Click it and Unblock the Notifications