தமிழக அரசு கேட்டது ரூ.6 ஆயிரம் கோடி.. கிடைத்ததோ ரூ.352 கோடி.. வெள்ள நிவாரண ஒதுக்கீட்டில் என்ன நடந்தது?
தமிழகத்திற்கு குறைந்த அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாம்
சென்னை: மழை, வெள்ள நிவாரணத்திற்காக தமிழக அரசு கேட்ட ரூ. 6,230 கோடி நிதியில் மத்திய அரசு இதுவரை வெறும் 352 கோடி ரூபாயை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. தமிழக அரசின் வருவாய்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
வழக்கமாக, கடுமையான, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் மாநிலங்கள் தங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நிதியை ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கும்..
உடனே மத்திய அரசும், ஒரு குழுவை நியமித்து, அந்த குழுவை சம்பந்தபட்ட இடங்களில் ஆய்வு செய்ய அனுப்பும்.. குழுவும் அதன்படியே இயற்கை சீற்ற பாதிப்பு தொடர்பாக அறிக்கையை மத்திய அரசிடம் வழங்கும்..

பரிந்துரை
இந்தக் குழுவின் பரிந்துரை அடிப்படையிலேயே, சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கு நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும்... இப்படித்தான் கடந்த காலங்களில் நடந்து வந்தது.. ஆனால் கடந்த சில வருடங்களாகவே, மாநில அரசுகள் கேட்கும் நிதியை விட மிக மிகக் குறைவான நிதியைதான் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது..

கோரிக்கை
இதன்படி கடந்த மழை வெள்ள பாதிப்புகளை சீர் செய்ய தமிழக அரசுக்கு ரூ.6230 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது... ஆனால் மத்திய அரசு வெறும் ரூ.352 கோடியை மட்டுமே ஒதுக்கீடு செய்தது.. இது தமிழக அரசு கேட்ட தொகையில் வெறும் 5.66 சதவீதம் என்று தமிழக அரசின் வருவாய்துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது...

நிலுவைகள்
ஏற்கனவே, ஜிஎஸ்டி உள்ளிட்ட நிலுவைகளை மத்திய அரசு வழங்க தாமதப்படுத்தி வரும் நிலையில், இயற்கை சீற்ற நிவாரணத்திலும் குறைவான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த நவம்பரில் தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், மத்திய அரசின் உதவியை மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அப்போதே நாடியிருந்தது..

ஒதுக்கீடு
அதன்படி, தமிழகத்தில் மழை வெள்ள சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க முதல்கட்டமாக 549 கோடியே 63 லட்ச ரூபாயும், நிரந்தரமாக சீரமைக்க 2 ஆயிரத்து 79 கோடியே 86 லட்ச ரூபாயும் என மொத்தம் 2 ஆயிரத்து 629 கோடியே 29 லட்ச ரூபாய் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யக் கோரி மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டது.. அப்படியிருந்தும், கேட்ட நிதியைவிட குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications