கட்சியை விட்டு தூக்குங்க..! ஓபிஸ்க்கு எதிராய் தங்கமணியின் யார்க்கர்! கூடவே ஒட்டி கொண்ட சீனிவாசன்..!
சென்னை : அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்க வேண்டும் என அமைச்சர் தங்கமணி ஆவேசமாக பேசிய நிலையில் இதே கருத்தை வலியுறுத்தி திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களும் மூத்த நிர்வாகிகளும் மிக ஆவேசமாக பேசியதோடு ஓ பன்னீர்செல்வத்தை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளனர். இதனையடுத்தே ஓபிஎஸ்ஸை நீக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கிறது..
கிளைச் செயலாளராக அதிமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர் ,எதிர்க்கட்சித் தலைவர் எனத் தொடங்கி அதிமுகவின் உச்சபட்ச அதிகாரமிக்க தகுதியான பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றியுள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து ஜெயக்குமார் பற்றவைத்த நெருப்பு இன்று எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் வந்து நின்றிருக்கிறது இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஓ பன்னீர்செல்வம் மேற்கொண்ட சட்ட போராட்டங்கள் அனைத்தும் வீணாகத்தான் போய்விட்டது. அதே நேரத்தில் அமைதியாக இருந்தாலும் பின்னணியில் மிகத் தீவிரமாக செயல்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

அதிமுகவில் மோதல்
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி ரத்து, பொருளாளர் பதவிக்கான அதிகாரங்கள் குறைப்பு என அடுத்தடுத்து பலத்த பின்னடைவை சந்தித்துள்ள ஓ பன்னீர் செல்வத்துக்கு இருந்த ஒரே வாய்ப்பு பறிபோகிறது அதாவது பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடலாம் என்ற எண்ணத்தில் மண்ணை அள்ளி போடும் விதமாக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு போட்டியிட 10 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு வேண்டும் என்ற விதி சேர்க்கப்பட்டுள்ளது . இதுதான் ஓபிஎஸ் சந்தித்த மிகப்பெரிய பின்னடைவு. காரணம் தற்போது அவர்வசம் ஐந்து மாவட்ட செயலாளர் எண்ணிக்கை மட்டுமே உள்ள நிலையில் இதனை கருத்தில் கொண்டு அவரை பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட விடக்கூடாது என திட்டமிட்டு விதி சேர்க்கப்பட்டிருப்பதாக கூறுகின்றனர் அதிமுக முன்னாள் நிர்வாகிகள்.

மேலும் சிக்கல்
அதே நேரத்தில் மேலும் ஒரு சிக்கலும் ஓபிஎஸ்-க்கு ஏற்பட்டிருக்கிறது அதிமுக பொதுச்செயலாளருக்கு உண்டான அனைத்து அதிகாரங்களும் எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முக்கிய நிர்வாகிகள் பலரும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த வகையில் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே பேசிய கேபி முனுசாமி ஓபிஎஸ் குறித்து தனது பலத்த அதிர்ச்சியை தெரிவித்து இருந்தார். மேடையில் பேசும் போதும் இதனை அவர் வலியுறுத்தினார். கட்சி அலுவலகத்தை உடைக்கும் அளவுக்குச் சென்ற ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தங்கமணி ஆவேசம்
தொடர்ந்து பேசிய அதிமுகவின் மூத்த நிர்வாகி முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிச்சாமி தீவிர ஆதரவாளருமான தங்கமணி இந்த விவகாரத்தில் கடுமையான கொந்தளிப்பை வெளிப்படுத்தினார். மேடையில் மிக ஆவேசமாக பேசிய அவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கட்சி அலுவலகத்திற்கு புகுந்து ரகளை செய்யும் அளவுக்கு சென்ற ஓ பன்னீர்செல்வத்தை துரோகி என கடுமையாக விமர்சித்ததோடு அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என பேசினார். இதற்கு பொதுக்குழுவில் இருந்த நிர்வாகிகள் உற்சாகமாக கைதட்டி தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
அதற்கு அடுத்ததாக பேசிய எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளரும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன் ஓபிஎஸ்ஐ மிகக் கடுமையாக விமர்சித்து பேசினார். தூக்கத்தில் இருந்து எழுப்பி கேட்டாலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் தனது ஆதரவு எனக் கூறிய அவர், ஆண்மையுள்ள கட்சியின் தலைவரா நீங்கள் என ஓ.பன்னீர் செல்வத்தை கேட்ட திண்டுக்கல் சீனிவாசன், பொதுக்குழு நடத்த தடை கேட்டவர் எல்லாம் கட்சியின் தலைவரா? என மிக ஆவேசமாக பேசினார் அவரது பேச்சுக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பொது குழு உறுப்பினர்கள் உற்சாகமாக கைதட்டி வரவேற்பு அளித்தனர்.

கட்சியில் இருந்து நீக்கம்
இப்படி அதிமுகவில் ஓபிஎஸ்-க்கு எதிராக மூத்த அமைச்சர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என போர்க் குரல் எழுப்பி உள்ள நிலையில் அதிகாரத்தை இழந்த ஓ பன்னீர்செல்வம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் பயணம் செய்த போதும் தன் கட்சி நிர்வாகிகளை அலையே வெளியேற்றப்படும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவார் என்றும் அதன் பிறகு இடைக்கால நீக்கம் பின்னர் நிரந்தரமாகும் என அடுத்தடுத்து அதிரடிகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக பொதுக்குழுவிலேயே ஓபிஎஸ்ஐ நீக்க வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டிருப்பது எதிர்பாராதது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்..












Click it and Unblock the Notifications