டிடிவி தினகரனுடன் அண்ணாமலை திடீர் மீட்டிங்.. உன்னிப்பாக கவனிக்கும் அதிமுக! ஆலோசித்தது என்ன?
சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார். சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் இந்த சந்திப்பானது நடந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணையுமாறு அண்ணாமலை வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் கூட்டணியில் நான் இருக்க மாட்டேன் என டிடிவி தினகரன் கூறியிருந்த நிலையில் அண்ணாமலை சந்தித்து பேசி இருக்கிறார்.

கடந்த லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த டிடிவி தினகரன், அண்மையில் அந்தக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளாரக ஏற்க முடியாது என்றும், அவர் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரையில் கூட்டணிக்கு திரும்ப மாட்டேன் என்றும் டிடிவி தினகரன் கூறியிருந்தார்.
மேலும், தமிழக பாஜகவின் தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரனையும் விமர்சித்த டிடிவி தினகரன், அண்ணாமலையை பாராட்டி பேசினார். அண்னாமலை பாஜக தலைவராக இருந்தவரை எல்லாம் சரியாக சென்றது என்றும் டிடிவி தினகரன் கூறியிருந்தார். மேலும், அண்ணாமலையிடம் அவ்வப்போது பேசி வருவதாகவும் டிடிவி தினகரன் கூறினார்.
டிடிவி தினகரன் தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அண்ணாமலையும் வலியுறுத்தியிருந்தார். இந்த சூழலில் டிடிவி தினகரனை அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார். சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அண்ணாமலை - டிடிவி தினகரன் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களும் பரபரப்புக்கும் வித்திட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமியை நேற்று நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசியிருந்தார். எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசிவிட்டு வந்த பிறகு நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிசாமி இடையே நடைபெற்ற சந்திப்பு முக்கியத்துவம் பெற்று இருந்தது. இத்தகைய சூழலில்தான் அண்ணாமலை டிடிவி தினகரன் சந்தித்து பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications