கையெல்லாம் தட்ட வேண்டாங்க.. புதைக்க இடம் கொடுங்க போதும்.. பெண் டாக்டரின் உருக்கம்!
கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்த எங்களை புதைக்க ஆறடி மண் மட்டும் கொடுங்க வேறு எதையும் நாங்கள் கேட்கவில்லை என்று டாக்டர் அழகு தமிழ் செல்வி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: உயிரை பணயம் வைத்து சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தால் அவர்களை புதைக்க எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்று டாக்டர் அழகு தமிழ் செல்வி கேள்வி எழுப்பியுள்ளார். பல ஆண்டுகாலமாக மக்கள் சேவை செய்யும் எங்களுக்கு கை தட்டி பாராட்டு தெரிவிக்க வேண்டாம் அதற்கு பதிலாக எங்களை புதைக்க ஆறடி மண் கொடுங்கள் என்று உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகம் முழுவதும் 30 லட்சம் பேரை பாதித்துள்ளது. பல லட்சம் பேரின் உயிரை பலிவாங்கியுள்ளது. இந்தியாவிலும் கோரதாண்டவம் ஆடத்தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான போரில் லட்சக்கணக்கான மருத்துவர்கள் ராணுவ வீரர்களாக இரவும் பகலும் தங்களின் உயிரை பணயம் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், செய்தியாளர்கள் பலரும் கொரோனோ நோய் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர். கொரோனா நோய்க்கு பாதிக்கப்பட்ட பலருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிலருக்கும் நோய் தொற்றுவதால் உயிரை இழக்க நேரிடுகிறது.
ஆந்திராவைச் சேர்ந்த 56 வயதான எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவருக்கு நெல்லூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டுவரப்பட்டார். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது அவர்களில் யாருக்கேனும் கொரோனா பாதிப்பு இருந்து அவருக்கு தொற்றி இருக்கலாம் என்று கூறப்பட்டது. அவர் சென்னை, வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது நடந்தது ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் என்பதுதான் சோகம்.
அவரது உடல் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, அம்பத்தூரில் உள்ள இந்து சுடுகாட்டில் திங்கள்கிழமை மதியம் 2 மணிக்கு புதைக்க முயற்சி செய்துள்ளனர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், அந்த இடத்தில் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் சுடுகாட்டுக்கே பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். அந்த மருத்துவரின் உடல் பல மணிநேரம் கழித்து புதைக்கப்பட்டது.
இதேபோல இரு தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் உயிரிழந்த டாக்டர் சைமன் ஹெர்குலிஸ் டி.பி.சத்திரம் பகுதியிலுள்ள கீழ்ப்பாக்கம் கல்லறையில் புதைக்க ஏற்பாடு செய்தபோது, அப்பகுதியினர் திரண்டு விரட்டியடிக்க, அண்ணாநகர் பகுதியிலுள்ள வேலங்காடு இடுகாட்டில் புதைக்கப்போனபோது அங்கும் ஆம்புலன்ஸ் அடித்து உடைத்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர்கள், டாக்டர்கள்மீது கடுமையான தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது.
டாக்டர்கள் பல ஆண்டுகாலமாக நோயாளிகளின் உயிரை காக்க சிகிச்சை அளிக்கின்றனர். கொரோனோ தொற்று நோய் ஏற்பட்ட பின்னர் இரவும் பகலும் உறங்காமல் வீடுகளுக்கு கூட போகாமல் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்த மருத்துவர்களுக்கே நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தால் புதைக்க கூட இடம் தராமல் விரட்டியடிப்பது பல மருத்துவர்களை வேதனைக்கு ஆளாக்கியுள்ளது.
Recommended Video
இந்த சம்பவம் குறித்து வேதனையுடன் பேசியுள்ள டாக்டர் அழகு தமிழ் செல்வி, மக்களின் உயிரை காக்க போராடும் எங்களுக்கு கை தட்டல் வேண்டாம், பாராட்டு வேண்டாம். நாங்கள் உயிரிழந்தால் புதைப்பதற்கு ஆறடி மண் மட்டும் கொடுங்கள் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.