கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: திமுக ஆட்சிக்கு வந்ததால்தான் இந்த தண்டனையாவது கிடைத்தது- தாய் சித்ரா
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்ததால்தான் சட்டப்படி போராடி, கொலையாளிகளுக்கு இந்த தண்டனையாவது கிடைத்தது என்று கோகுல்ராஜ் தாய் சித்ரா தெரிவித்தார்.
Recommended Video
2015 ஆம் ஆண்டு வேறு சாதி பெண்ணை காதலித்ததற்காக ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் என்ற பொறியியல் மாணவர் துன்புறுத்தி தலை துண்டித்து கொல்லப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவன தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என கடந்த 5 ஆம் தேதி மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தீர்ப்பு விவரம்
அவர்களுக்கு தண்டனை விபரங்களை இன்று நீதிமன்றம் அறிவித்தது. அதில், யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனையும், அவரது ஓட்டுநர் அருணுக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இருவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது. இதில் குற்றம்சாட்டப்பட்ட சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சுரேஷ் ஆகிய 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

கோகுல் ராஜ் தாய் பேட்டி
தண்டனை விபரம் அறிவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கோகுல்ராஜின் தாய் சித்ரா, தன்னுடைய நிலை வேறு எந்த தாய்க்கும் வந்துவிடக்கூடாது என்றார். தன்னுடைய மகனின் படத்துக்கும், கணவரின் படத்துக்கும் ஒரே நேரத்தில் மாலை போடுவதாக வேதனையுடன் தெரிவித்தார்.

மேல்முறையீடு செய்ய திட்டம்
கோகுல்ராஜை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் என எதிர்பார்த்ததாக கூறிய அவர், ஆயுள் தண்டனையும் கொடூரமான ஒன்றுதான் என்றார். வழக்கில் குற்றம்சாட்டபட்ட 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை ஏற்க முடியாது எனக்கூறிய சித்ரா, இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், 5 பேருக்கும் ஆயுள் தண்டனை வாங்கி தருவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

திமுக ஆட்சி
திமுக ஆட்சி வந்ததால் மட்டுமே கோகுல்ராஜ் கொலையாளிகளுக்கு இந்த தண்டனையாவது கிடைத்தது எனக்கூறிய அவர், ஏழைகளுக்கு உதவுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் நீதிக்காக குரல் கொடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நீதிக்காக போராடியதாகவும் கூறினார்.

ஒரு ரூபாய் கூட வாங்காத மோகன்
இந்த வழக்கில் தங்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் ப.பா.மோகன் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என்றும், தன்னை விட ஆர்வமாக இந்த வழக்கை நடத்தி நீதி பெற்று தந்ததாகவும் சித்ரா நெகிழ்ச்சியுடன் கூறினார். இதுபோன்ற ஆணவக்கொலைகள் இனி நடக்கூடாது என்ற நோக்கத்துடன் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தொடங்கி மருத்துவர்கள் வரை பலரும் போராடியதாகவும் அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்வதாகவும் கோகுல்ராஜின் தாய் சித்ரா தெரிவித்தார். வழக்கறிஞர் மோகனுக்கு அரசு தரப்பு கட்டணம் வழங்காமல் தவிர்த்ததாகவும், டோல் கேட் பணத்தை கூட தராததால் வழக்கில் ஆஜராகும் ஒவ்வொரு நாளும் தனக்கு ரூபாய் 6000 செலவானதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான், திமுக அரசு சட்டப் போராட்டத்திற்கு உதவியதாக சித்ரா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications