உச்சக்கட்ட பதற்றத்தில் தமிழ்நாடு.. இன்று டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி! அமித்ஷாவை சந்திக்கிறார்
சென்னை: தமிழ்நாட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் பதற்றம் தொடர்ந்து வரும் நிலையில் இன்று டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருக்கிறார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்குகள் நிலவி வருகின்றன. ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவிக்கும் கருத்துக்கள் தொடர்ந்து விமர்சனத்துக்கு ஆளாகி வருகின்றன.
அண்மையில் பல்கலைக்கழக வேந்தர் தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவை ஏற்க மறுத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
என் ஐ ஏ சோதனை: 'அத்தனை பாராட்டும் அமித்ஷா, அஜித் தோவலையே சாரும்'.. ஆடிட்டர் குருமூர்த்தி
ஆளுநர் டெல்லி பயணம்
இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை சென்னையில் இருந்து டெல்லி புறப்படுகிறார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து அவர் பேச இருக்கிறார். தமிழ்நாட்டில் தொடர்ந்து வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் இதர விவகாரங்கள் தொடர்பாக அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் விளக்கமளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
30ம் தேதி வரை
செப்டம்பர் 30 ஆம் தேதி வரை டெல்லியில் தங்கி இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு முக்கிய நிகழ்வுகளிலும், சந்திப்புகளிலும் கலந்துகொள்வார் என தெரிகிறது. தமிழ்நாட்டில் தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களாலும் அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பாலும் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் ஆளுநரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கோவை தாக்குதல்
கடந்த வியாழக்கிழமை மாலை கோவை பாஜக அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கோவையில் பதற்றம் ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவும் கோவை மாவட்டம் கோவைபுதூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ஆனந்த கல்யாண கிருஷ்ணன் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பரபரப்பை அதிகரித்தது.
15 பேர் கைது
இதன் தொடர்ச்சியாக சென்னை, மதுரை, கன்னியாகுமரி, ஈரோடு, திண்டுக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட பல இடங்களில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவங்கள், வாகனங்களுக்கு தீ வைத்த நிகழ்வுகளும் அரங்கேறின. இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி எச்சரித்தார். இது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 15 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்கள்.