விவாதப்பொருளான ஆளுநர் ரவி பேச்சு.. தமிழகத்தில் தலித் கல்வி மோசமா? மத்திய அரசின் “உண்மை” டேட்டா இதான்
சென்னை: ஹரிஜன் சேவா சங்கத்தின் 90 வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் கல்வி விகிதத்தை அவர் உண்மைக்கு புறம்பாக கூறவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையில் உள்ள எஸ்ஆர்எஸ் சர்வோதயா பள்ளியின் மகளிர் விடுதியில் நாட்டின் 75 வது சுதந்திர தின விழா மற்றும் ஹரிஜன் சேவா சங்கத்தின் 90 வது ஆண்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "ஆங்கிலேயர்கள் நம் நாட்டை மதம், இனம், மொழி என பிரித்தார்கள். அவர்களை எதிர்த்துப் போராடிய மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்டது தான் ஹரிஜன சங்கம்.
அதிகார வரம்பை புரிந்து நடந்து கொண்டால் யாருக்கும் பிரச்சனை இல்லை! ஆளுநர் ரவிக்கு ஸ்டாலின் பாடம்!
மகாத்மா காந்தி
காந்தி அடித்தட்டு மக்களுக்கான வளர்ச்சியை கொண்டுவருவதில் தீவிர பங்காற்றினார். காந்தியின் மறைவுக்குப் பின்னர் வசதியானவர்களே எல்லாம் கிடைத்தது. கல்வி, தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு என எல்லாவற்றிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தலித் கல்வி
தமிழகத்தில் 51 சதவிகிதம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர். இதை எண்ணி நாம் பெருமை அடைய வேண்டும். தமிழ்நாட்டில் 24 சதவிகிதம் பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், பட்டியலின குழந்தைகளில் வெறும் 13 முதல் 14 சதவீத குழந்தைகளே பள்ளிக்கு செல்கின்றனர்.
தீண்டாமை
சில சமூகத்தினரால் மட்டுமே 70 முதல் 75 சதவீதம் அளவிற்கு கல்வியில் வளர்ச்சி அடைய முடிகிறது. இந்த சதவிகிதத்திற்கான இடைவெளியை தான் நாம் பார்க்க வேண்டும். இன்னும் பல இடங்களிலும் பல கோவில்களிலும் பல பள்ளிகளிலும் பட்டியலின மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை உள்ளது." என்றார்.
தவறான தகவல்
இதற்கிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த விகிதம் இந்திய அரசு வெளியிட்டுள்ள கல்வி விகிதத்திற்கு குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத்திய அரசு வெளியிட்ட GER எனப்படும் உயர் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதத்தில், தமிழ்நாட்டில் பட்டியலினத்தவர்களின் விகிதம் 39.6 ஆகவும், பழங்குடியின மக்களின் விகிதம் 40.7 ஆகவும் உள்ளது. இது இந்தியாவின் மொத்த சராசரியை விட இருமடங்கு அதிகம்.
இந்திய அளவில் பெஸ்ட்
வடகிழக்கில் உள்ள சிறிய மாநிலங்களை தவிர்த்து அதிக மக்கல் தொகை கொண்ட பெரிய மாநிலங்களில் தமிழ்நாடே இதில் முதலிடத்தில் இருக்கிறது. அதேபோல் தமிழ்நாட்டின் மொத்த ஜி.இ.ஆர். விகிதத்தை எடுத்துக் கொண்டால் 51.4% ஆக உள்ளது. இதிலும் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடே முதலிடம் வகிக்கிறது. இந்தியாவின் மொத்த சராசரி 27.1 ஆக உள்ள நிலையில் தமிழ்நாடு பன்மடங்கு உயரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.