விதிமீறல் கட்டிடங்கள்.. இடிக்க எடுத்த நடவடிக்கை என்ன.. செங்கல்பட்டு கலெக்டருக்கு பறந்த நோட்டீஸ்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே முதலியார் குப்பம், பரமன்கேணி கடலோரப் பகுதியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த பகுதி கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் -3 பகுதியில் வருகிறது. எனினும் இந்த பகுதியில் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விதிமீறல் கட்டிடங்களை இடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பியுள்ள பசுமை தீர்ப்பாயம், செங்கல்பட்டு ஆட்சியர் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தின் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகள் கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் -3 பகுதியில் வருகிறது. கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் 3 என்னவென்றால், அதிக அளவில் வாழிடங்கள் இல்லாத பகுதிகளும் கடலோர ஒழுங்குமுறை மண்டலம் 2ல் உட்படாத ஊரகப்பகுதிகள், இன்ன பிற பகுதிகளும் கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் -3 ல் வரும். இந்த பகுதிகளில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள கடும் கட்டுப்பாடுகள் உள்ளது. கடற்கரையை ஒட்டியுள்ள 200 மீட்டர் தூரத்திற்கு கட்டுமானங்கள் எழுப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் அரசே கட்டிடங்களை கட்ட வேண்டும் என்றாலும் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. அவ்வளவு எளிதாக கட்டிடங்களை கட்டிவிட முடியாது. சுற்றுச்சூழல் அனுமதி வாங்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா, லத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட முதலியார் குப்பம், பரமன்கேணி கடலோரப் பகுதியில் விதிகளை மீறி வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுபற்றி செங்கல்பட்டு மாவட்டம், தழுதாளி குப்பத்தை சேர்ந்த கண்ணப்பன் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த ஆண்டுவழக்கு தொடர்ந்தார்.
கண்ணன் தாக்கல் செய்திருந்த மனுவில், " செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா, லத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட முதலியார் குப்பம், பரமன்கேணி கடலோரப் பகுதியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இப்பகுதிகள் கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் -3 பகுதியில் வருகிறது. ஆனால் உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது. இவற்றை இடித்து அகற்ற தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் மற்றும் செங்கல்பட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த அமர்வின் உறுப்பினர்கள், தமிழகஅரசு பதில் அளிக்க கடந்த முறை உத்தரவிட்டிருந்தனர். அதன்படி தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில் பரமன்கேணி பகுதியில் 3 கட்டிடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளன. அதில் ஒரு கட்டிடம் கட்ட, கிராம ஊராட்சி தலைவரிடம் அனுமதி பெறப்பட்டிருக்கிறது.
இதர கட்டிடங்களுக்கு அனுமதி பெறவில்லை. இந்த 3 கட்டிடங்களுக்கும் கடந்த மார்ச் மாதம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த வீடுகளை ஏன் இடிக்கக்கூடாது என விளக்கம் கேட்டு மாவட்ட நகரமைப்பு குழும துணை இயக்குநர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக ஒருவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இந்த நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது எனஅறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வின் உறுப்பினர்கள், "விதிகளை மீறி கட்டப்பட்ட வீடுகளை இடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து செங்கல்பட்டு ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications