பேனிக் பட்டனை இப்படித்தான் அழுத்தனும்.. அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? - முழு விவரம் இங்கே!
சென்னை: அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
சென்னையில் 500 மாநகர பேருந்துகளில் ஒவ்வொரு பேருந்திலும் 3 சிசிடிவி கேமராக்கள், 4 பேனிக் பட்டன்கள், மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், பேனிக் பட்டன்களை பயன்படுத்துவது குறித்து பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது போக்குவரத்து துறை.
விடுதலைப் புலிகள் மீண்டும் தாக்குதல்?இலங்கை அரசு சொல்லும் விளக்கம் இதுதான்-எம்.பிக்கள் கடும் கண்டனம்
பெண்கள் பாதுகாப்பு
அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்கும் வகையில், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக நிர்பயா திட்டத்தின் கீழ் பேருந்துகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இதற்காக 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு 2,500 பேருந்துகளில் சிசிடிவி, அவசர அழைப்பு பட்டன்கள் உள்ளிட்ட அதிநவீன பாதுகாப்பு வசதிகள் பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
தொடங்கி வைத்த முதல்வர்
அதன்படி, அரசுப் பேருந்துகளில் 3 சிசிடிவி கேமராக்கள், 4 பேனிக் பட்டன்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயங்கும் மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக 500 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமரா, பேனிக் பட்டன்கள் உள்ளிட்ட புதிய வசதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
வழிகாட்டு நெறிமுறைகள்
இந்நிலையில், இதுகுறித்து பேருந்து ஓட்டுனர், நடத்துனருக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பேருந்திலும் 3 சிசிடிவி கேமராக்கள், 4 பேனிக் பட்டன்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பேருந்துகளில் மற்ற பயணிகளால் பெண்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போதும், அசவுகரியங்களின்போதும் பேனிக் பட்டனை அழுத்தி தகவல்/ எச்சரிக்கை தர வேண்டும். அப்போது கட்டளை மையத்தில் எச்சரிக்கை மணி ஒலிப்பதோடு வீடியோ பதிவின் தொகுப்பும் கிடைக்கும்.
உடனடி நடவடிக்கை
அவசரகால ஒலி ஏற்படும்போது அங்குள்ள நிலைமையை கண்காணித்து நடத்துனர் போலீசுக்கு புகார் தெரிவிக்க வேண்டும். அல்லது மருத்துவ உதவி தேவைப்பட்டால் நிர்பயா உதவி மையத்திற்கு தெரிவிக்கவேண்டும்.
புகார் தெரிவிக்கப்பட்டவுடன் தலைமையக தலைமை கட்டுப்பாட்டு மையத்தில் உள்ளவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.