சோளிங்கர் ஏரிக்கு நடுவில் கிணறு தோண்ட திட்டம்.. டெண்டரை ரத்து செய்தது ஹைகோர்ட்
சென்னை: வேலூர் மாவட்டம், சோளிங்கர் ஏரியின் நடுவில் கிணறு தோண்டுவது தொடர்பான டெண்டரை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், சோளிங்கர் தேர்வு நிலை பேரூராட்சியில் உள்ள சோளிங்கர் ஏரியின் நடுவில் 99 லட்சம் ரூபாய் செலவில் கிணறு தோண்ட மாவட்ட நிர்வாகம் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது.
ஏரியின் நடுவில் கிணறு அமைத்து தண்ணீர் எடுத்தால் ஏரி வறண்டு விடும் எனவும், 900 ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கப்படும் எனவும் கூறி, டெண்டரை ரத்து செய்யக் கோரி சோளிங்கரைச் சேர்ந்த சேகர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தபோது, சோளிங்கரின் குடிநீர் வசதிக்காக பல ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு தண்ணீர் பற்றாக்குறை ஏதுமில்லை எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
பொள்ளாச்சி வன்கொடுமை.. 3 பேருக்கு ஜாமீன் மறுப்பு.. ஹைகோர்ட் உத்தரவு
வழக்கை விசாரித்த நீதிபதி, நீர் நிலையில் கிணறு தோண்ட பொதுப்பணித்துறையின் ஒப்புதல் பெறாததையும், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வும் நடத்தப்படாததையும் சுட்டிக்காட்டி, ஏரியில் கிணறு தோண்டுவதற்கான டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டார்.