நீட் .. தமிழக அரசு அமைத்த குழு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது அல்ல.. ஹைகோர்ட் தள்ளுபடி
சென்னை : நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதை எதிர்த்து பாஜக தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யப்படுவதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10-ம் தேதி அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டது.
இந்த அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டம், நாடு முழுவதற்கும் பொதுவானது/ மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த 2019-ம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. அந்தச் சட்டத்தின் அடிப்படையில், மருத்துவ ஆலோசனைக் குழுமம் அமைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் குழப்பம்
மருத்துவக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மருத்துவ ஆணையத்திடமும், ஆலோசனை குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்க வேண்டும். அதை மீறும் வகையில் தற்போது தமிழக அரசு குழு அமைத்துள்ளதாகவும், இது அனுமதிக்கத்தக்கதல்ல . நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்துக்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலும், தேசிய நலனின் அடிப்படையிலும், நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு, இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது . ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிக்க ஏதுவாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

நீதிமன்றம் கேள்வி
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் கடந்த ஜூன் 29 அன்று விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதிகள் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும், குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பினர். அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க அவகாசம் வேண்டுமென அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதையடுத்து வழக்கு கடந்த ஜூலை 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பொதுநலன் இல்லை
மீண்டும் கடந்த ஜூலை 5ம் தேதி வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்த போது, மூத்த வழக்கறிஞர் வில்சன், பாஜகவின் இந்த வழக்கு, விளம்பரம் மற்றும் அரசியல் நோக்கத்திற்காக தொடரப்பட்டிருப்பதாகவும், அதில் பொதுநலன் இல்லை என்று வாதிட்டார். இந்நிலயில் தமிழ்நாடு அரசு தரப்பில், இந்த வழக்கில் வாதாட தயாராக இருப்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனை அப்போது பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக மத்திய அரசு ஜூலை 8ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டனர். அத்துடன், இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதியும், மாணவர்கள், அரசியல் கட்சியினர் ஆகியோரிடம் தனித்தனியாக வாதங்களை பெற வேண்டி இருப்பதாலும் வழக்கின் விசாரணையை ஜூலை 13ம் தேதி விசாரிப்பதாக கூறி வழக்கை ஒத்தி வைத்திருந்தனர்.

எதிரானது அல்ல
இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி,குழு அமைத்த அரசின் இந்த அறிவிப்பானை உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல எனவும், பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே அரசு இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும்,பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தால் மட்டுமே அதனை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவிக்க முடியும் என தெரிவித்தார்.

கரு.நாகராஜன் குறித்து நீதிமன்றம்
மனுதாரர் தரப்பில் ஏ.கே.ராஜன் குழு அமைத்தது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என வாதிடப்பட்டது. அதற்கு நீதிபதிகள் நீட் தேர்வால் மட்டுமே அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் அனைத்து தரப்பினருக்கும் இடம் கிடைக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதா என மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பினார். தமிழக அரசின் இந்த அறிவிப்பானைக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை என கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, நீட் பாதிப்பு குறித்து தமிழக அரசு மக்கள் கருத்து கேட்பது குறித்து கேள்வி எழுப்ப நீங்கள் யார் என கரு.நாகராஜனுக்கு கேள்வி எழுப்பி விளம்பரத்துக்காக இது போன்ற வழக்குகள் தொடரப்படுவதாக கருத்து தெரிவித்தார்..

மத்திய அரசு
இதையடுத்து,மத்திய அரசு தரப்பில், அரசியல் சாசனம் 162 வது பிரிவு சட்டமன்றத்துக்கு அதிகாரம் உள்ள விஷயங்களில் சட்டம் இயற்றலாம் ஆனால் மத்திய - மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மாநில அரசு, மத்திய அரசின் சட்டத்தை மீறி, சட்டம் இயற்ற முடியாது என தெரிவிக்கப்பட்டது.

பின்தங்கியவர்கள் நிலைமை
இதையடுத்து ஆய்வு குழுவின் அறிக்கை மூலமாக மட்டுமே அரசு பள்ளி மாணவர்கள், பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களின் நிலைமை தெரிய வரும் என்றும் ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை மூலமாக நீட் தேர்வு நடைமுறையில் மாற்றங்கள் கொண்டு வர முடியும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.

கொள்கை முடிவு
இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, அரசு பள்ளி மாண்வர்கள், பின்தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வு காரணமாக தாக்கம் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதே தவிர, வேறு ஏதும் கூறப்படவில்லை எனவும்,உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவோ,மத்திய அரசு சட்டங்களுக்கு எதிராகவும் இல்லை என தெரிவித்தார். குழு ஏதேனும் ஆதாரங்கள் கிடைத்தால் அதை பயன்படுத்தி, பிந்தங்கிய மாணவர்களும் மருத்துவ மாணவர் சேர்க்கை பெறும் வகையில் மத்திய அரசிடம், மாணவர் சேர்க்கை நடைமுறையை மாற்றியமைக்க கோரலாம் எனவும், அதேபோல நீட் தேர்வில் பங்கேற்கும் வகையில் பள்ளி பாடத்திட்டத்தின் தரம் உயர்த்தப்படலாம்,குழு நியமனம் என்பது வீண் செலவு எனக் கூறமுடியாது என தெரிவித்த நீதிபதி, மக்கள் கருத்து கேட்பது தொடர்பான கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்து,மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையை தடுக்கும் வகையில், மாநில அரசு தனது அதிகார வரம்பை மீறவில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications