இந்த '11 மாவட்டங்களில்..' கனமழை வெளுத்து வாங்க போகுது.. சூப்பர் செய்தி சொன்ன வானிலை மையம்
சென்னை: தென் மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
இந்த ஆண்டு மழைக் காலம் தொடங்கியது முதலே மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த காலங்களில் ஏற்பட்டதை போலத் தண்ணீர் பற்றாக்குறை இந்த ஆண்டு ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பருவமழை காரணமாகத் தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரங்கள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளன. அதேபோல சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்களான வீராணம், புழல் உட்பட முக்கிய ஏரிகள் நிரம்பியுள்ளன.

11 மாவட்டங்களில் கனமழை
இந்நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உட்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நீலகிரி, கோவை, ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யும்.

தொடரும் கனமழை
அதேபோல நாளை ( அக்டோபர் 4 ) புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் டெல்டா (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிகக் கனமழையும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, மதுரை, விருதுநகர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அடுத்து வரும் நாட்கள்
வரும் அக்டோபர் 5ஆம் தேதி தென் மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிகக் கனமழை பெய்யக்கூடும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். வரும் அக்டோபர் 6ஆம் தேதி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி அரியலூர், மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தலைநகர் சென்னை
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரியில் 100 மிமி, கோத்தகிரி, மணப்பாறை பகுதிகளில் தலா 90 மிமி மழை பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications