சென்னையில் இடி மின்னலுடன் கொட்டிய கனமழை.. கோவையில் பெய்த மழையால் மாறிய வானிலை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. கிண்டி, சைதாபேட்டை, பாடி, அண்ணாநகர் ஆகியபகுதிகளில் கனமழை கொட்டியது.
சென்னை: மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. சென்னையில் இரவு நேரத்தில் நகரின் முக்கிய பகுதிகளிலும் புற நகரிலும் மழை பெய்தது. கோவை, ஈரோடு நகரங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்திருந்தது.
வானிலை ஆய்வு மையம் கணித்தது போலவே, சென்னையில் நேற்றிரவு பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. சென்னையின் புறநகர் பகுதிகளான ஆவடி, குன்றத்தூர், பூவிருந்தவல்லி, மாங்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.
தென்மேற்கு பருவமழை கடந்த மே மாத இறுதியில் தொடங்கினாலும் கோவை மாவட்டத்தில் இதுவரை மக்களும் விவசாயிகளும் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. சில இடங்களில் மழையும், சில இடங்களில் அவ்வப்போது லேசான சாரலும் பெய்து வந்தது. நேற்று காலை வழக்கம்போல வெயில் அடித்தது. ஆனாலும் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது.
இந்த நிலையில் சரவணம்பட்டி, காளப்பட்டி, கோவில்பாளையம் மற்றும் அதை சுற்றி உள்ள சில பகுதிகளில் காலை 11 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. பலத்த மழை தொடர்ந்து பிற்பகல் 1 மணியளவில் கோவை மாநகர பகுதி மற்றும் வடவள்ளி, துடியலூர், கணபதி உள்ளிட்ட பல இடங்களில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் மழை நீர் சாலையோரங்களில் ஆறாக ஓடியது. திடீர் மழையால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். மேலும் பள்ளிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகளில் பலர் நனைந்தபடி வீடு திரும்பினார்கள். மழை காரணமாக கோவையில் நிலவி வந்த வெப்பம் தணிந்து இரவில் குளிர்ந்த காற்று வீசியது. அதுபோன்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
ஈரோடு மாநகரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்த நிலையில் நேற்று காலையிலும் வெயில் வழக்கம்போல் அடித்தது. இதைத்தொடர்ந்து மதியம் வானில் கருமேகங்கள் தோன்றின. பின்னர் மதியம் 2.15 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. சில மணி நேரம் மழை நீடித்ததால் வெள்ளம் பெருக்கெடுத்தது. திடீரென பெய்த கனமழையால் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். மழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவியது.
இன்றைய தினமும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications