சென்னையில் விளாசிய கனமழை.. வெள்ளம் சூழ்ந்த சாலைகள்..தவிக்கும் வாகன ஓட்டிகள்..சுரங்கபாதைகள் மூடல்
சென்னை: தொடர் கனமழையின் காரணமாக சென்னையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் முக்கிய சுரங்க பாதைகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் மழை காலத்தில் வாகன ஓட்டிகள் தவிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியது. இதனால் கடந்த இரண்டு தினங்களாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகள் ஆறுகள், குளங்கள் போல் காட்சி அளிக்கின்றன.
நேற்று காலை 08.30 மணியிலிருந்து இன்று அதிகாலை 4 மணி நிலவரப்படி நேற்று காலை 08.30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக நெற்குன்றத்தில்13 செமீ, பெரம்பூரில் 12 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கத்தில் 11.2 சென்டி மீட்டரும், மீனம்பாக்கத்தில் 8.2 செ.மீட்டரும், நந்தனத்தில் 8.7 செ.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. . அயனாவரம், தண்டையார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சாலைகளில் வெள்ளம்
சென்னையில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளநீர் வடிந்தாலும் பல பகுதிகளில் குளம்போல தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் தவித்து வருகின்றனர்.

குளமான பேருந்து நிலையம்
விடாது பெய்து வரும் கனமழையால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மயிலாப்பூர், மந்தைவெளி பகுதிகளில் சில பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. மந்தைவெளி பேருந்து நிலையத்தில் குளம் போல தண்ணீர் தேங்கியுள்ளதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சுரங்கப்பாதைகளில் வெள்ளநீர்
வியாசர்பாடி சுரங்கப்பாதை குளம் போல் ஆனதால் அந்த வழியாக சென்ற மாநகர பேருந்து அதில் சிக்கியது. அந்த பேருந்தில் பயணம் சென்ற 25க்கும் மேற்பட்ட பயணிகள் தீயணைப்பு படையினரின் உதவியுடன் ரப்பர் படகுகள் மேலும் மீட்கப்பட்டனர். வியாசர்பாடி சுரங்கப்பாதையை போலவே ரங்கராஜபுரம் சுரங்கப்பாதையும் மழையில் மூழ்கிவிடும். இதனால் அந்த சுரங்கப்பாதையையும் மூடப்பட்டிருக்கிறது.

சுரங்கப்பாதைகள் மூடல்
காவல்துறையை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சென்னையில் மழை நீர் அதிகம் தேங்கி இருக்கும் கணேசபுரம், ரங்கராஜபுரம் சுரங்கப்பாதைகள் இரண்டும் மூடப்பட்டிருக்கின்றன. சுரங்கப்பாதையில் தேங்கியிருக்கும் மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளார்கள். அதுவரைக்கும் பொதுமக்களின் போக்குவரத்திற்காக மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

போக்குவரத்து மாற்றம்
ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை வழியாக செல்லும் வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டாது. ரங்கராஜபுரம் மேம்பாலம் வழியே செல்ல அறிவுறுத்தப்படுகிறது. கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக உள்ளிருந்து வெளியில் செல்லக்கூடிய வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை, காந்தி நகர் ரவுண்டானா பேசின்பாலம் வழியாகவும், வெளியில் இருந்து உள்ளே வரக்கூடிய வாகனங்கள் பெரம்பூர் நெடுஞ்சாலை, முரசொலி மாறன் பாலம் வழியாகவும் செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6ஆம் தேதி வரை கனமழை
தமிழகத்தில் நவம்பர் 6ஆம் தேதி வரை கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே விடுக்கப்பட்ட ஆரஞ்சு எச்சரிக்கை தற்போது மஞ்சள் எச்சரிக்கையாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications