ஓபிஎஸ் வீடு டூ எடப்பாடி இல்லம்.. மாறி மாறி ஓடும் நிர்வாகிகள்.. உச்சகட்ட பரபரப்பு.. நடந்தது என்ன?
சென்னை: ஓபிஎஸ் வீட்டுக்கும் எடப்பாடி இல்லத்திற்கும் அதிமுக மூத்த நிர்வாகிகள் மாறி மாறி ஆலோசனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை எனும் பிரச்சினை எங்கிருந்து ஆரம்பித்தது என்பது அனைவரும் அறிவர். எப்போது எடப்பாடியின் கை மட்டும் ஓங்கி ஒருங்கிணைப்பாளராக இருந்தும் ஆதரவாளர்களுக்கு ஒரு நன்மையையும் பெற்று தர முடியவில்லையே என ஓபிஎஸ்ஸிடம் ஆதரவாளர்கள் ஆதங்கப்பட்டதிலிருந்தே பிரச்சினை பெரிதாகி வருகிறது.
இரு தலைமைக்கும் இடையே அவ்வப்போது பனிப்போர் நிலவி வந்தாலும் நேற்று முதல் அது பூதாகரமாகியுள்ளது. கடந்த 6ஆம் தேதி ஓபிஎஸ்ஸின் சொந்த ஊரில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டதால் அதிமுகவில் மீண்டும் சலசலப்பு எழுந்தது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி? ஓபிஎஸ் முன் இருக்கும் வெறும் 4 ஆப்சன்.. கிளைமேக்ஸை நெருங்கும் மோதல்!
நிரந்தர பொதுச் செயலாளர்
அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக பதவியேற்க உள்ள எடப்பாடி பழனிச்சாமி என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டி ஓபிஎஸ் தரப்பை மிகவும் கோபமடையச் செய்துவிட்டன. இந்த நிலையில் வரும் 23 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
பொதுக் குழு கூட்டம்
இந்த பொதுக் குழு கூட்டத்தில் பேச வேண்டியது குறித்து ஆலோசனை நடத்த நேற்றைய தினம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் உள்ளேயும் வெளியேயும் ஒற்றைத் தலைமை கோஷம் எழுந்தது. இதனால் அதிமுக தலைமை அலுவலகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.
ஒற்றைத் தலைமை
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒற்றைத் தலைமை பொறுப்பை விட்டுத் தரக் கூடாது என ஓபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸுக்கு விட்டுத் தரக் கூடாது என ஈபிஎஸ்ஸும் தீவிரமாக உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில்தான் நேற்று கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் ஓபிஎஸ் வீட்டில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டம்
அப்போது எந்த சூழலிலும் ஒற்றை தலைமையை எடப்பாடிக்கு விட்டுத் தரக் கூடாது என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து இன்றைய தினமும் இரண்டாவது நாளாக ஓபிஎஸ் வீட்டில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அது போல் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிலும் அவருடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனைகள் பரபரத்தன.
இரு நாட்கள்
ஓபிஎஸ்ஸை சமாதானப்படுத்தும் முயற்சியாக அவரது வீட்டில் எடப்பாடி ஆதரவாளர்கள் சென்று பேசியுள்ளனர். ஆனால் ஓபிஎஸ் ஒற்றைத் தலைமையை விட்டுக் கொடுக்க மறுத்துவிட்டாராம். இப்படியாக ஓபிஎஸ் வீட்டில் இரு நாட்களாகவும் எடப்பாடி வீட்டில் ஒரு முறையும் ஆலோசனை நடந்துள்ளது.