பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை: 20 ஆண்டுகளுக்குப் பின் உறுதி செய்த ஹைகோர்ட்
இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் நடந்த காலம், சமூக பொருளாதார நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டும், சிறப்பு காரணங்களாக கருதியும் குறைந்தபட்ச தண்டனையை விட குறைவாக தண்டனை வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்தார் உயர்நீதிமன்ற நீதிபதி. 20 ஆண்டுகாலமாக நடைபெற்ற வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சரவணன் என்பவர் கடந்த 2002ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி அப்பகுதியை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தபோது, அந்த பெண்ணின் அண்ணன் பார்த்ததால், பயந்து ஓடியுள்ளார். ஆத்திரத்தில் அண்ணன் வீசிய கல் தங்கை மீது பட்டு காயமடைந்தார்.
சரவணனுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நடுவர் மீதிமன்றம் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதை மாவட்ட அமர்வு நீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கை நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி விசாரித்தார். அப்போது சம்பந்தப்பட்ட பெண்ணின் சம்மதத்துடன் தான் தனிமையில் இருந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் அண்ணன் அந்த பெண் மீதுதான் கல்லை விசியதாக சரவணன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
20 ஆண்டுகளுக்கு நடந்த சம்பவம், மனுதாரருக்கு 48 வயதாகிறது, குடிப்பழக்கம் உள்ளவர், உடல்நிலை சரியில்லாததுடன், தற்போது மனைவி பிள்ளைகள் என குடும்பத்துடன் வாழ்பவர் என்பதால் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் நடந்த காலம், சமூக பொருளாதார நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டும், சிறப்பு காரணங்களாக கருதியும் குறைந்தபட்ச தண்டனையை விட குறைவாக தண்டனை வழங்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டியதுடன், திருவண்ணாமலை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்வதாக கூறி, சரவணனின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளார்.