தேர்தல் முறைகேடு: ஒவ்வொரு நீதிபதிகள் வீடுகளுக்கே தேடி போன திமுக தரப்பு.. அவசர வழக்காக ஏற்க மறுப்பு
சென்னை: ஊரக உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக கூட்டணி சாா்பில் வெற்றி பெற்றவா்கள் பதவி ஏற்க தடை கோரி திமுக சாா்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அவசரமாக இதை விசாரிக்க முடியாது என உயா்நீதிமன்றம் கூறிவிட்டது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் கடந்த டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடந்தது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் நடந்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றவா்கள் ஜனவரி 6ம் தேதியான இன்று பதவி ஏற்க உள்ளனா்.
ஆனால், சேலம், திருவண்ணாமலை, கரூா் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கையின்போது நிறைய முறைகேடுகள் நடந்ததாக திமுக குற்றம்சாட்டி வருகிறது. எனவே, வெற்றிப் பெற்ற அதிமுக கூட்டணியை சோ்ந்தவா்கள் பதவி ஏற்க தடை விதிக்க திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூண்டோடு வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள்... ஆளுநர் உரையை புறக்கணிக்க என்ன காரணம்?
நீதிபதி இல்லம்
குறிப்பிட்ட வாக்கு எண்ணும் மையங்களில் மீண்டும் வாக்குகளை எண்ண உத்தரவிடவேண்டும் என்பதும் திமுக கோரிக்கை. திமுகவைச் சோ்ந்த பலா் இதுதொடர்பாக வழக்குத் தொடர்ந்து வருகிறார்கள். குறிப்பாக, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்க தடை விதிக்க வேண்டும், இதனை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும். இவ்வாறு திமுக சார்பில் முறையீட்டுடன், வழக்கறிஞர், நீலகண்டன், தலைமையிலான வழக்கறிஞர்கள், ஹைகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி வீட்டுக்கு நேற்று சென்றனர்.
வேறு நீதிபதி
அங்கு, தலைமை நீதிபதி இல்லை. எனவே, நீதிபதி பி.டி.ஆதிகேசவலுவின் வீட்டுக்குச் சென்று முறையிட்டனா். உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான வழக்கை மூத்த நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஏற்கெனவே விசாரித்து வருவதை, சுட்டிக் காட்டிய நீதிபதி ஆதிகேசவலு, அவரிடமே முறையிடும்படி அறிவுறுத்தியதாக தெரிகிறது.
விடுமுறை தினம்
இதனையடுத்து நீதிபதி எம்.சத்திய நாராயணன் வீட்டுக்கு திமுக வக்கீல் குழு சென்று, முறையிட்டது. வக்கீல்கள் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார் நீதிபதி சத்திய நாராயணன். நேற்று விடுமுறை தினம் என்பதால், அவசர வழக்காக இதை விசாரிக்க தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஹைகோர்ட்
எனவே, இன்று உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான முதல் அமா்வில் திமுக இதுதொடா்பாக முறையிட முடிவு செய்துள்ளது. திமுக வக்கீல்கள் குழு நீதிபதிகளின் இல்லங்களுக்கு அடுத்தடுத்து சென்று முறையிட்டது பரபரப்பாக பேசப்படுகிறது.