இப்படி ஒரு சிக்கலில் ஓபிஎஸ்.. போடி தேர்தல் வெற்றி செல்லுமா, செல்லாதா? ஹைகோர்ட் அதிரடி நோட்டீஸ்
சென்னை: போடிநாயக்கனூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கில், தேர்தல் ஆணையம் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, சசிகலா விவகாரத்தால், கட்சியை பலப்படுத்துவது பற்றி, பலத்த சிந்தனையில் உள்ள அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வத்திற்கு, இந்த வழக்கு மற்றொரு நெருக்கடியாக பார்க்கப்படுகிறது.

போடிநாயக்கனூர் தொகுதி
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனை விட 11 ஆயிரத்து 21 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

பன்னீர் செல்வம் வெற்றிக்கு எதிராக வழக்கு
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றதை எதிர்த்து தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறைபாடுகள் உள்ளதாகவும், கடன் மதிப்பை குறைத்து காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நோட்டீஸ்
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி பாரதிதாசன், மனுவுக்கு செப்டம்பர் 24ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையம், அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு
இதற்கிடையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்த எம்.எல்.ரவி, நீதிமன்ற கட்டணம் செலுத்தாததால் தனது வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரினார். இதுதொடர்பாக மனுத்தாக்கல் செய்ய மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி பாரதிதாசன், விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications