மஞ்சளின் மகிமை... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றலால் அமோக விற்பனை
சென்னை: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் மஞ்சளுக்கு உள்ளதால் உள்நாடு மற்றும் வெளிநாடு ஏற்றுமதி என அதன் விற்பனை அமோகமாக உள்ளது.
மனித குலத்தை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக மஞ்சள் தூளை உணவுகளில் மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக மஞ்சள் விலை கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் இந்த விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க முடியுமா?.. டாக்டர் முத்து செல்லக்குமாரின் விளக்கம்
நோய் எதிர்ப்பு
மனித ஆரோக்கியத்தை பேணி காப்பதில் மஞ்சள் தூளுக்கு என எப்போதுமே தனி மகிமை உண்டு. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் உணவுப் பொருட்களில் பிரதான இடத்தில் இருக்கிறது மஞ்சள் தூள். வைரஸ் மற்றும் பாக்டீரியா உள்ளிட்டவைகளை எதிர்க்கும் சக்தி மஞ்சள் தூளுக்கு உள்ளதால் ஜலதோஷம், தொண்டை வலி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கக் கூடிய அரு மருந்தாக மஞ்சள் திகழ்கிறது.
உலக நாடுகள்
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பின்பு உலக நாடுகளின் கவனம் இந்தியாவின் பக்கம் திரும்ப காரணம் இந்தியர்களின் நோய் எதிர்ப்பு சக்தியும், உணவு முறையும் தான். மிளகு, பூண்டு, இஞ்சி, மஞ்சள் உள்ளிட்ட வஸ்துகளை உணவுகளில் ஏதோ ஒரு வகையில் இந்தியர்கள் சேர்த்துக்கொள்வதால் தான் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக முக்கிய காரணம் என அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கருதின. இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் மஞ்சள் தூளின் நன்மையும், மருத்துவ குணமும் வெளிநாட்டினருக்கு பெரும் வியப்பையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.
விலை கிடுகிடு உயர்வு
இதனிடையே இந்தியாவில் இருந்து அமெரிக்கா, இங்கிலாந்து, வங்க தேசம், மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மஞ்சள் ஏற்றுமதி தூள் பறக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தமிழகத்தின் ஈரோடு மஞ்சள் சந்தையும், தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் மஞ்சள் சந்தையும் பெயர் பெற்ற ஒன்றாக திகழ்கின்றன. அங்குள்ள மொத்த வியாபாரிகளிடம் முகவர்கள் மூலம் பல நாடுகளில் இருந்தும் கொள்முதல் ஆர்டர் குவிந்து வருகின்றன.
வீட்டு மருந்து
தமிழகத்தை பொறுத்தவரை மஞ்சளை மாமருந்தாக மக்கள் கருதுகிறார்கள். சளி பிடித்தாலோ அல்லது சளி பிடிப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டாலோ மஞ்சள் தூள் போட்ட பால் அருந்தி நோயின் வீரியத்தை விரட்டி அடிப்பார்கள். அதேபோல், கிராமப்புறங்களில் சிறுவர்கள் யாராவது கீழே விழுந்து கை கால்களில் சிராய்ப்பு உள்ளிட்ட லேசான காயங்கள் ஏற்பட்டால் மக்களின் முதல் மருத்துவ உதவி காயம்பட்ட இடங்களில் மஞ்சள் தூள் வைப்பதாக தான் இருக்கும். இப்படி மருத்துவ நன்மைகள் நிறைந்த மஞ்சளின் மகிமையை உலக நாடுகள் அறிந்துகொள்ள கொரோனா காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.