புத்தாண்டு நள்ளிரவில் கோவில்களை திறந்தால் முற்றுகை போராட்டம்.. இந்து மக்கள் கட்சி எச்சரிக்கை!
சென்னை : டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவு கோவில்கள் திறக்கப்பட்டால் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகங்கள் முன்பு இந்து மக்கள் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என இந்து மக்கள் கட்சியினர் அறிவித்துள்ளனர். நள்ளிரவில் கோவில்களைத் திறப்பது ஆகம விதிகளுக்குப் புறம்பானது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நடை திறக்கப்பட்டு வருகிறது.
இதற்கு இந்து அமைப்புகள் ஆண்டுதோறும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டு கோவில்கள் நள்ளிரவில் திறக்கப்பட்டால் இந்து மக்கள் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.
பட விழாவிற்கு வந்த இடத்தில் தேம்பி தேம்பி அழுத தர்ஷா குப்தா.. அவருக்கு நான் அப்படி என்ன பண்ணினேன்?
நள்ளிரவில் கோவில்கள் திறப்பு
புத்தாண்டு பிறப்பை ஒட்டி, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நள்ளிரவில் நடை திறக்கப்பட்டு வருகிறது. புத்தாண்டு அன்று நள்ளிரவிலேயே பக்தர்கள் கோவில்களில் வழிபட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக அதற்கு இந்து அமைப்புகளில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. நள்ளிரவு நேரத்தில் கோவில்களில் நடை திறப்பது ஆகம விதிகளுக்கு புறம்பாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்து அமைப்புகள் கண்டனம்
இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு தினத்தை ஒட்டி நாளை டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவில் 12 மணியளவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இது கோவில் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு எதிரானது என இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆகம விதிகளுக்குப் புறம்பானது
இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் சுவாமிநாதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு சீரழிவுகள் நடக்கிறது. அனைத்திற்கும் மேலாக நள்ளிரவில் கோவில்கள் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுவதும் நடந்து வருகிறது. நள்ளிரவில் கோவில்களைத் திறப்பது ஆகம விதிகளுக்குப் புறம்பானது.
இந்து மக்கள் கட்சி எச்சரிக்கை
தமிழகத்தில் டிசம்பர் 31 நள்ளிரவில் கோயில்கள் திறக்கப்படுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தனியார் நிர்வாகத்தின் கீழ் உள்ள முக்கியமான பெரிய கோயில்களில் கூட இந்த நடைமுறையைப் பின்பற்ற அரசு அறிவுறுத்த வேண்டும். டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவில் கோயில்கள் திறக்கப்பட்டால் அறநிலையத்துறை அலுவலகங்கள் முன்பு இந்து மக்கள் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷ்வ இந்து பரிஷத்
இதேபோல, கோவையில் ஆகம விதிகளுக்கு எதிராக வரும் ஆங்கில புத்தாண்டு நள்ளிரவில் கோவில் திறப்பதை தடை செய்யக்கோரி கோவை மாவட்ட நிர்வாகத்திடம் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. விஷ்வ இந்து பரிஷத் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் அதன் இணை அமைப்பாளர் திருஞான சம்பந்தம் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக மனு அளித்துள்ளார்.