பாஜக பேசுவது ஆன்மிகம் அல்ல.. மதவெறி அரசியல் எடுபடாது.. தமிழிசைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி!
சென்னை: தமிழ்நாட்டில் மதவெறி அரசியல் எடுபடாது என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நாகர்கோவிலில் இன்று அமைச்சர் மனோதங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது மனோ தங்கராஜ் கூறுகையில், மாநில அரசுகளால் நடத்தப்படும் தொலைக்காட்சிகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வர பார்க்கிறது.
5.5 கோடி பேருக்கு 11 ஆட்சி மொழி.. ஆனால் இந்தியாவில் மட்டும் இரண்டா? அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி
மாநில அதிகாரம்
மாநிலங்களின் அதிகாரங்களை பிடுங்கி, மாநில சுயாட்சி தத்துவத்திற்கு எதிராக மத்தியில் அதிகாரங்களை குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. மாநிலங்களுக்கான அதிகாரத்தை அதிகம் வழங்க வேண்டும் என்பது அனைத்து மாநிலங்களின் கோரிக்கை. ஆனால் அதை மீறுவது கண்டனத்துக்குரியது. பாஜக ஆளுகின்ற மாநிலங்களிலேயே இந்தி திணிப்பையும், அதிகார குவியலையும் எதிர்த்து பலர் பேசி வருகிறார்கள்.
தமிழிசை செளந்தரராஜன் பற்றி கருத்து
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அரசியலில் ஆன்மிகத்தை புகுத்தி பேசுகிறார். தமிழக அரசியலில் தலை நுழைப்பேன் என்று கூறுகிறார். ஏன் தலையை மட்டும் நுழைக்கிறார்கள். முழு உடலையும் நுழைக்கட்டும். ஆனால் இங்கு எதுவும் எடுபடாது. ஏனெனில் தற்போது மக்கள் மதவெறிக்கு பின்னால் இல்லை. பாஜக பேசுவது ஆன்மிகம் அல்ல. ஆன்மிகம் என்பது அன்பை உள்ளடக்கியது. அறத்தை முன் வைக்க கூடியது. இந்த அன்பு, அறத்துக்கு நேர் எதிராக வெறுப்பை பாஜகவினர் பேசி வருகிறார்கள். நிறுவனம் ஆக்கப்பட்ட மதங்களின் பிரதிநிதிகளாக இருந்து கொண்டு மாற்று மதங்களை கொச்சைப்படுத்துவது, மக்களிடம் மத உணர்வை தூண்டுவது ஆன்மிகம் இல்லை என்று தெரிவித்தார்.
ஆளுநர் பதவி தேவையா?
தொடர்ந்து, ஆளுநர் பதவி தேவையா என்ற விவாதம் இருந்து வருகிறது. ஆளுநர் பதவி குறித்து முன்னாள் முதலமைச்சர் அண்ணா அப்போதே விமர்சித்தார். ஆளுநர் பதவி மாநிலங்களுக்கு உதவியாக இருந்ததாக வரலாறு குறைவு. மாறாக தலைவலியாக தான் இருந்து வருகிறது. அதிலும் இப்படிப்பட்ட நபர்கள் தலை வலியை மேலும் மேலும் அதிகப்படுத்துகிறார்கள்.
பன்வாரிலால் புரோகித் விவகாரம்
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு ரூ. 40 முதல் ரூ. 50 கோடி பணம் பெற்றுக் கொண்டு விற்கப்பட்டதாக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார். இதை தாமதமாக கண்டுபிடித்துள்ளார். அவர் ஆளுநராக இருந்தபோது, அவர் தலைமையில் தான் துணைவேந்தர் பதவிகள் நிரப்பப்பட்டன. அப்போது நற்சான்றிதழை அவரே வழங்கினார். ஏன் அப்போதே அதை பேசி தடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.