லேசான கொரோனா பாதிப்பு இருந்தால்.. உடனே மருத்துவமனைக்கு ஓட தேவையில்லை.. இதை செய்யுங்கள் போதும்
சென்னை: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து நோயாளிகளும் மருத்துவமனைகளில் அனுமதியாக தேவையில்லை, வீட்டிலிருந்தபடியே கூட கொரோனா பாதிப்பை எளிதாகக் கையாளலாம்.
இந்தியாவில் தினசரி கொரோன பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் முதல் முறையாக மூன்று லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு, இப்போது 3.60 லட்சமாக உள்ளது.
வரும் மே மாதம் 15ஆம் தேதி, இந்தியாவில் கொரோனா பரவல் உச்சமடையும் என்றும் அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு எட்டு லட்சம் வரைகூட அதிகரிக்கலாம் என்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கட்டுக்குள் கொரோனா.. 'மும்பை மாடல்' சீக்ரெட் என்ன? - எம்பி சஞ்சய் ரவுத்
மருத்துவ உதவி
ஏற்கனவே, நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவருக்கும் மருத்துவ உதவி தேவைப்படாது. பெரும்பாலான நபர்களுக்கு இது சாதாரண காய்ச்சலைப் போலவே இருக்கும். இதுபோன்ற நபர்களுக்கு மருத்துவச் சிகிச்சைகள் தேவைப்படாது. அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டால் போதும்.
லேசான கொரோனா பாதிப்பு
லேசான கொரோனா பாதிப்பு உடையவர்களும் மருத்துவமனைகளை நோக்கிப் படையெடுக்கின்றனர். இதனால் மருத்துவமனைகள் நிரம்பிவிடுவதால், கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்படும் நோயாளிகளுக்குச் சரியான நேரத்தில் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. லேசான கொரோனா பாதிப்பு உடையவர்கள் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டால் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலை உருவாகாது.
முதலில் பரிசோதனை
இந்நிலையில், கொரோனா பரிசோதனை செய்துகொண்டு முடிவுகளுக்குக் காத்திருப்பவர்களும், லேசான கொரோனா பாதிப்பு உடையவர்களும் வீடுகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை டாக்டர் அதிதி வெளியிட்டுள்ளார். அதீத சோர்வு, காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருந்தாலே உங்களுக்கு கொரோனா இருப்பதாகக் கருதிக் கொண்டு, உடனடியாக மருத்துவ பரிசோதனையை எடுக்க வேண்டும்,
ஆக்சிஜன் அளவு, வெப்பநிலை
இருப்பினும், பரிசோதனைகள் முடிவுகள் வரும் வரை காத்திருக்காமல், உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். கொரோனா அறிகுறிகள் மோசமானால் உடனடியாக மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும். உடலில் உள்ள ஆக்சிஜன் அளவு, வெப்பநிலை, நாடி துடிப்பு ஆகியவற்றைத் தினசரி 4 முறை செக் செய்யுங்கள். இதற்குத் தேவையான கருவிகள் அனைத்து மருந்தங்களிலும் கிடைக்கும்.
ஆக்சிஜன் குறையக் கூடாது
ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் அளவு (spo2) 94% கீழ் சென்றால் உங்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி தேவை என்று பொருள். கொரோனா பாதிப்பு உடைய பலருக்கு ரத்தத்தில் ஆக்ஜின் அளவு 85-க்கும் கீழ் சென்றாலும் அவர்கள் பார்க்க நலமாக இருப்பதைப் போலவே தோன்றும். ஆனால், அவர்களின் உடல் திடீரென்று மோசமாகத் தொடங்கும். உடல் வலியை அதிகம் பொறுத்துக் கொள்ளப் பழகியவர்களுக்கு இது போல நிகழ அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஆக்சிஜன் அளவை எப்படி அதிகரிக்கலாம்
வீட்டில் இருக்கும் அனைவரது உடல்நிலைகளையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கொரோனா அறிகுறி உடையவர்கள் குப்புறப் படுத்துக் கொண்டு மூச்சு விடுவது (prone breathing)போன்ற எளிய செயல்கள் மூலம் உடலில் இருக்கும் ஆக்சிஜன் அளவை மேம்படுத்த முடியும். மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்கத் தாமதமானால், அப்போதுவரை இதுபோன்ற செயல்களைச் செய்து, தற்காலிகமாக நிலைமையைச் சமாளிக்கலாம். ஆனால், இது தற்காலிகமானது தான். உடலில் ஆக்சிஜன் அளவு 94% கீழ் சென்றால் உடனடியாக மருத்துவர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும்.