கிராமப்புற மக்களுக்கு குட் நியூஸ்.. இந்த நிதியாண்டில் 2.89 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்- பிடிஆர்
சென்னை: கிராமப்புற மக்களுக்கு வீட்டு வசதி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.

பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது:
கிராமப்புறங்களில் வாழும் அனைத்து மக்களுக்கும், அனைத்து வசதிகளுடனும் கூடிய நலவாழ்வு வழங்குவது, அடிப்படை கட்டமைப்பு சேவை வழங்குவதில் அரசு கவனம் செலுத்தும். தமிழகத்தில் உள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் சராசரியாக ஒரு நாளைக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும்.

ரூ.2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
கிராமப்புறங்களில் அமைந்துள்ள 1.27 கோடி குடும்பங்களுக்கு வீட்டு குடிநீர் இணைப்பு வசதி செய்து தர வழிவகை செய்யப்படும். 83.92 லட்சம் குடும்பங்களுக்கு தற்போது வீட்டுக் குடிநீர் இணைப்பு திட்டம் இல்லை. 2022ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதிக்குள் இவர்களுக்கு குடிநீர் இணைப்பு வசதி செய்ய வழிவகை செய்யப்படும். இந்த நோக்கத்தை நிறைவேற்ற 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜல் ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்படும்.

கருணாநிதி முதல் முயற்சி
முதல் முறையாக முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில்தான் குடிசை வீடுகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டது. இந்தியாவின் முன்மாதிரி திட்டம் அதுவாகும். 2020-21ம் நிதியாண்டில் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது வருத்தத்துக்கு உரியது.

இந்த நிதியாண்டில் 2.89 லட்சம் வீடுகள்
2020 வரை கட்டுமானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட வீடுகள் முழுமையாக நிறைவு செய்யப்பட வேண்டியுள்ளது. முழுமையடையாத அனைத்து வீடுகளையும் விரைந்து கட்டி முடிக்க இந்த அரசு உறுதி செய்ததுடன், 2021-22ம் நிதியாண்டில் மொத்தம் 8 ஆயிரத்து 17 கோடி செலவில் மேலும் 2 லட்சத்து 89 ஆயிரத்து 870 வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
Recommended Video

அரசு மானியம் அதிகரிப்பு
கிராமப்புறங்களில் தற்போது வீட்டுவசதி இல்லாமலிருக்கும் 8 லட்சத்து 3 ஆயிரம் குடும்பங்களுக்கு அடுத்த ஐந்தாண்டுகளில் வீடுகள் வழங்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும். தற்போது உள்ள மேல்கூரைக்கான செலவான 50 ஆயிரம் ரூபாயுடன் கூடுதலாக மாநில அரசு 70 ஆயிரம் ரூபாய் வழங்கும். எனவே, ஒரு வீட்டுக்கான அரசு மானியம் 2.76 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மிகவும், ஏழை எளிய பயனாளர்களுக்கு மலிவு விலையில், தரமான வீடுகள் கட்டுவதற்காக நவீன மற்றும் விலை குறைவான தொழில் நுட்பங்களை இந்த அரசு ஊக்குவிக்கும். 2021-22 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டங்கள் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்திற்கு 3548 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications