போலீசுக்கு புரியுறமாதிரி சொல்லுங்களேன்.. ஒவ்வொரு முறையும் பூசி மொழுகலாமா? - முதல்வரை சாடிய தினகரன்!
சென்னை : அண்மைக் காலமாக அதிகரித்து வரும் லாக்அப் மரணங்களைத் தடுக்க காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் என்ன செய்யப் போகிறார்? என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காவல் நிலையத்தில் கையெழுத்து போடச் சென்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவர் காவல் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டதாக, உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக திமுக அரசை சாடியுள்ள டிடிவி.தினகரன், ஒவ்வொரு முறை இப்படி நடக்கும்போதும் காவல்துறையினரோடு சேர்ந்து கொண்டு ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி பூசி மெழுகுவதையே வாடிக்கையாக வைத்திருப்பது சரியா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மீண்டும் லாக்-அப் டெத்? கையெழுத்து போடச் சென்ற இளைஞர் மர்ம மரணம்.. குமரி மாவட்டத்தில் அதிர்ச்சி!
மினி லாரி ஓட்டுநர்
கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை அருகே முல்லைசேரிவிளையைச் சேர்ந்த சசிகுமார் என்பவரின் மகன் அஜித் (22). அஜித் ஐடிஐ முடித்து மினி லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். அஜித் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரிடம் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடர்பாக குலசேகரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இரண்டு மாதங்கள் சிறையிலிருந்த பின் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அஜித், குலசேகரம் காவல் நிலைத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.
பலியான இளைஞர்
கடந்த 23ஆம் தேதி கையெழுத்து போடுவதற்கு குலசேகரம் காவல்நிலையம் சென்ற இளைஞர் அஜித் வீடு திரும்பவில்லை. குலசேகரம் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன் அஜித்தின் வீட்டிற்கு சென்று மிரட்டி பெற்றோர்களிடம் கையெழுத்து பெற்றுபிறகு அஜித் விஷம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறி அஜித்தின் தந்தை சசிகுமாரை அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஜித் உயிரிழந்துள்ளார்.
லாக்கப் மரணம்
இதையடுத்து தனது மகன் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும் உயிரிழப்பிற்கு குலசேகரம் போலீசாரே காரணம் என்றும் கூறி அஜித்தின் தந்தை சசிகுமார், அஜித்தின் உடலை பெற மறுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். காவல் நிலையத்தில் கையெழுத்து போடச் சென்ற இளைஞர் ஒருவர் மர்மமாக முறையில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக லாக்கப் மரணங்கள் தொடர்ந்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் என்ன செய்யப் போகிறார்?
இந்நிலையில், இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "கன்னியாகுமரி மாவட்டம், முல்லைசேரிவிளை பகுதியைச் சேர்ந்த இளைஞர் அஜித் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு, காவல் நிலையத்திலே மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அண்மைக் காலமாக அதிகரித்து வரும் இத்தகைய லாக்அப் மரணங்களைத் தடுக்க காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் என்ன செய்யப் போகிறார்?
பூசி மெழுகுவது சரியா?
ஒவ்வொரு முறை இப்படி நடக்கும்போதும் காவல்துறையினரோடு சேர்ந்து கொண்டு ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி பூசி மெழுகுவதையே வாடிக்கையாக வைத்திருப்பது சரியா? புகாருக்கு ஆளானவர்களை சட்டத்திற்குட்பட்டு விசாரிக்க வேண்டியதன் அவசியம், காவல்துறையினருக்கு புரியும் வகையில் தெளிவான உத்தரவினைப் பிறப்பிக்க வேண்டும். காவல் நிலையங்கள் மனிதநேயத்தோடும், மனசாட்சியோடும் நடந்து கொள்ள வேண்டிய இடங்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு முதலமைச்சருக்கும், டி.ஜி.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கும் இருக்கிறது" என வலியுறுத்தியுள்ளார்.