கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை.. சென்னை வங்கி கொள்ளை நடந்தது எப்படி?
சென்னை: சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியின் நகை கடன் பிரிவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது எப்படி? என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கொள்ளை தொடர்பாக ஒருவரின் படம் வெளியாகி உள்ளது.
சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் பெடரல் வங்கி உள்ளது. இந்த வங்கியின் நகைக்கடன் வழங்கும் பிரிவில் இன்று வழக்கம்போல் ஊழியர்கள் பணி செய்து வந்தனர்.
இந்நிலையில் வங்கிக்குள் மாஸ்க் அணிந்து நுழைந்த 3 மர்மநபர்கள் ஊழியர்களை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடித்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கோடிக்கணக்கில் கொள்ளை
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பணம், நகைகள் என கொள்ளைப்போன பொருட்களின் மொத்த மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அந்த வங்கியில் பணிபுரிந்த ஊழியரே தனது நண்பர்களுடன் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். வங்கி சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்து போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர். கொள்ளையர்களை கண்டுப்பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 பேர் சேர்ந்து கைவரிசை
இந்நிலையில் தான் வங்கியில் கொள்ளை சம்பவம் நடந்தது எப்படி என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. அதாவது இன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வங்கியின் நகைக்கடன் வழங்கும் பிரிவுக்கு 3 பேர் 2 இருசக்கர வாகனத்தில் வந்தனர். வாடிக்கையாளர் போல் வங்கிக்குள் நுழைந்தவர்கள் காவலாளிக்கு மயக்கமருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்தனர். மேலும் வங்கியில் உள்ள ஊழியர்களை மிரட்டில் கழிவறையில் அடைத்துவைத்து கொள்ளையடித்துள்ளனர்.

லாக்கரை இருந்து நகைகளை அள்ளினர்
அதன்பிறகு அவர்கள் ஊழியர்களிடம் இருந்து பெற்ற சாவியை பயன்படுத்தி வங்கியில் உள்ள லாக்கரில் இருந்த நகைகளை அள்ளிக்கொண்டு கொள்ளையடித்து சென்றனர். அதன்பிறகு வங்கியில் இருந்து சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அண்ணாநகர் மற்றும் அரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை துவங்கினர். கூடுதல் காவல் ஆணையர் அன்பு, இணை ஆணையர் ராஜேஸ்வரி, துணை ஆணையர் விஜயகுமார் உள்பட போலீஸ் அதிகாரிகள் வந்து விசாரணையை துவங்கினர்.

ஒருவரின் படம் வெளியீடு
இதற்கிடையே வங்கி கொள்ளையில் முக்கிய நபராக கருதப்படும் நபரின் படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். முருகன் என்பவரின் படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதோடு வங்கி கொள்ளையர்களை பிடிக்க சென்னை நகரில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications