தவிர்க்க முடியாத சக்தி.. புரட்டி போட போகும் கமல், சீமான்.. திமுக, அதிமுகவிற்கு சிக்கல்.. ரிப்போர்ட்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன், சீமான் இருவரும் கிங் மேக்கர்களாக உருவெடுக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன!
சூயஸ் கால்வாயில் மாட்டிய எவர் கிவன் கப்பல் போலத்தான் நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யத்திடம் திராவிட கட்சிகள் மாட்டி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் இந்த முறை நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் இரண்டும் மிகப்பெரிய அளவில் எழுச்சி பெற போகிறது.
சட்டசபை தேர்தல் தொடர்பாக நேற்று சத்தியம் டிவி கருத்து கணிப்பு வெளியிட்டது. இந்த கருத்து கணிப்பின்படி திமுக மொத்தம் 112 இடங்களில் வெல்லும், அதிமுக 52 இடங்களில் வெற்றிபெறும். ஆனால் 70 தொகுதிகளில் இழுபறி நீடிக்கும். இந்த 70 தொகுதிகள்தான் தேர்தல் முடிவை தீர்மானிக்க போகிறது.
எப்படி ?
இங்கு வெல்லும் கட்சியே தேர்தலில் வெல்லும். கருத்து கணிப்பில் மொத்தமாக ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று 36% பேர் தெரிவிக்கிறார்கள். அதேபோல் முதல்வர் பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டும் என்று 27% பேர் நினைக்கிறார்கள். கிட்டத்தட்ட இவர்கள் இருவருக்கும் இணையாக சீமான், கமல்ஹாசன் இருவருமே விரட்டி வருகிறார்கள்.,
முதல்வர் வேட்பாளர்
இந்த கருத்து கணிப்பின்படி தமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் சீமான் முதல்வராக வேண்டும் என்று 13% பேர் ஆதரவு தெரிவிக்கிறார்கள். அதேபோல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முதல்வராக வேண்டும் என்று 13% பேர் விரும்புகிறார்கள். அதோடு இந்த இரண்டு கட்சிகளும் பல்வேறு தொகுதிகளில் பெரிய அளவில் கேம் சேஞ்சர்களாக உருவெடுத்துள்ளனர்.
இழுபறி
தமிழக சட்டசபை தேர்தலில் 70 தொகுதிகளில் இழுபறி நீடிக்கும் என்று இந்த சர்வே கூறுகிறது. இந்த 70 தொகுதிகளிலும் திமுக , அதிமுகவிற்கு இடையில் நாம் தமிழரும், மக்கள் நீதி மய்யமும்தான் உள்ளது. இவர்கள் இருவரும் 70 தொகுதிகளில் எடுக்கும் அதிக வாக்கு சதவிகிதத்தால்தான் திமுக , அதிமுக இடையே இழுபறி நீடிக்கிறது. பல்வேறு தொகுதிகளில் திராவிட கட்சிகளுக்கு மநீம, நாம் தமிழர் நல்ல டப் பைட் கொடுக்கிறது.
கொங்கு
முக்கியமாக சென்னை, கொங்கில் மக்கள் நீதி மய்யம் நன்றாக செயல்படுகிறது. டெல்டா, மத்திய தமிழகத்தில் நாம் தமிழர் சிறப்பாக செயல்படுகிறது. இழுபறி நீடிக்கும் 70 தொகுதிகளில் எந்த கட்சி வெற்றிபெறும் என்பதை மநீம, நாம் தமிழர் இரண்டும்தான் தீர்மானிக்க போகிறது. இந்த சர்வேயின்படி இப்போது தமிழகத்தில் மநீம, நாம் தமிழர் இரண்டும் எந்த இடத்திலும் உறுதியாக வெல்லவில்லை.
வேறுபாடு
ஆனால் பல தொகுதிகளில் மநீம, நாம் தமிழர் இரண்டும் 10% வாக்குகளை பெறுகிறது. 10% வாக்குகளை இப்படி மொத்தமாக மநீம, நாம் தமிழர் அள்ளுவதால் அங்கு திமுக, அதிமுக இடையே வேறுபாடு குறைந்து தேர்தல் முடிவுகள் மாறுகின்றன. கொங்கு, சென்னை , டெல்டாவில் இது அதிகம் நடக்க வாய்ப்புள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக இடையிலான வாக்கு சதவிகித வித்தியாசம் 1%.
நாம் தமிழர்
திமுகவை விட அதிமுக 1% கூடுதல் வாக்குகள் பெற்றது . அந்த தேர்தலில் நாம் தமிழர் பெற்ற வாக்குகள் 1%. அந்த தேர்தலில் நாம் தமிழர்தான் கேம் சேஞ்சர். இந்த தேர்தலிலும் கமல், சீமான் இரண்டு பேரும்தான் தேர்தல் முடிவை மாற்ற போவது. சத்தியம் சர்வேயின்படி இந்த 70 தொகுதிகளில் திமுக - அதிமுக இடையே 3% வாக்குகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. கமல், சீமான் ஆகியோரின் எழுச்சியால்தான் திமுக , அதிமுக இடையில் இந்த இழுபறி ஏற்படுகிறது.
கமல்
கமல், சீமான் இருவரும் யாருடைய வாக்குகளை தேர்தல் நேரத்தில் பிரிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை . ஆனால் அதை பொறுத்துதான் தேர்தல் முடிவே இருக்க போகிறது. கமல், சீமான் பிரிக்கும் வாக்குகளை எப்படியாவது கட்டி இழுக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக, அதிமுக இருக்கிறது. அதுவும் இன்னும் ஒரே வாரத்தில்!
தலைவிதி
வளர்ந்து வரும் தலைவர்களாக இருந்தாலும் திராவிட கட்சிகளின் தலைவிதி கமல், சீமானை பொறுத்துதான் இருக்கிறது. இந்த சட்டசபை தேர்தலில் கமல், சீமான் ஆகியோர் முதல்வராகும் வாய்ப்பு குறைவுதான்.. ஆனால் இவர்கள்தான் கிங்கை தீர்மானிக்க போகும் கிங் மேக்கர்களாக மாற வாய்ப்புள்ளது.