உங்கள் வீட்டு மின் கட்டணம் இந்த மாதம் எவ்வளவு.. இப்படி பாருங்க.. அடியோடு குறைக்க சூப்பர் டிப்ஸ்
சென்னை: உங்கள் வீட்டு மின் கட்டணம் இந்த மாதம் அதிகமாக வந்ததா.. அல்லது கடந்த முறையும் இந்த முறையும் மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளதா... மின் கட்டணம் எந்த யூனிட்டிற்கு எவ்வளவு என்று தெரிந்தால், நிச்சயம் நீங்கள் அதற்கு தகுந்தாற் போல் மின் கட்டணத்தை குறைக்க சேமிக்க தொடங்குவீர்கள்.. ஏசி பயன்பாட்டினை மாற்றுவதன் மூலம் கணிசமான தொகையை மிச்சம் பண்ணலாம்.
தமிழ்நாட்டில் அண்மையில் வீடு, அடுக்குமாடி குடியிருப்புகள், கோயில்கள், மசூதி, தேவாலயங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள் என அனைத்து வகையான மின் இணைப்புகளுக்கும் மின் கட்டணம் ஜூலை 1ம் தேதி முன் தேதியிட்டு உயர்த்தப்பட்டது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின் படி, கடந்த ஜூலை 1ம் தேதி முன் தேதியிட்டு, அனைத்து வகை மின்சார பயன்பாட்டிற்கும் கட்டணம் 4.83 சதவீதம் அதிகரித்துள்ளது. வழக்கமான மின் கட்டணத்தை விட இனி பொதுமக்கள் கணிசமான பணத்தை கூடுதலாக கட்ட வேண்டிய நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி, 400 யூனிட் வரை உள்ள வீட்டு பயன்பாடு மின்கட்டணம், இதுவரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60 ஆக இருந்தது. தற்போது 20 பைசா உயர்ந்து, ரூ.4.80 ஆக உயர்த்தப்பட்டது. இதேபோல் 401 முதல் 500 வரையிலான யூனிட் பயன்படுத்துவோருக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.6.15 ஆக இருந்த கட்டணம், தற்போது 30 பைசா உயர்ந்து, ரூ.6.45 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
501 முதல் 600 வரையிலான யூனிட் பயன்படுத்துவோருக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.8.15 ஆக இருந்த கட்டணம், தற்போது 40 பைசா உயர்ந்து, ரூ.8.55 ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. 601 முதல் 800 வரையிலான யூனிட் பயன்படுத்துவோருக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.9.20 ஆக இருந்தது. தற்போது 45 பைசா உயர்ந்து, ரூ.9.65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
801 முதல் 1,000 வரையிலான யூனிட் பயன்படுத்துவோருக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.10.20 ஆக இருந்தது. தற்போது 50 பைசா உயர்ந்து, ரூ.10.70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1,000 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு இதுவரை யூனிட்டுக்கு ரூ.11.25 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது 55 பைசா உயர்ந்து, ரூ.11.80 ஆக உயர்நதுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் ரூ.8.15-ல் இருந்து ரூ.8.55 ஆக உயர்த்தப்பட்டது.
கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட குடிசைகள், தாட்கோ நிறுவனங்களுக்கு மின் கட்டணம் ரூ.9.35-ல் இருந்து ரூ.9.80 ஆக அதிகரித்துள்ளது. ரயில்வே மற்றும் ராணுவ குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் ரூ.8.15-ல் இருந்து ரூ.8.55 ஆக அதிகரித்துள்ளது. குடிசை மற்றும் குறு நிறுவன மின் கட்டணம் 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.6.95 ஆக அதிகரித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகளுக்கான மின் கட்டணம் ரூ.8.15-ல் இருந்து ரூ.8.55 ஆக அதிகரித்துள்ளது. தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதிகளுக்கான 500 கிலோ வாட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.8.70-ல் இருந்து ரூ.9.10 ஆக அதிகரிக்கப்பட்டது.
உயர்த்தப்பட்ட மின் கட்டணங்களின் படி, மின்வாரிய அதிகாரிகள் கடந்த மாத இறுதியில் மின் கட்டணத்தை கணக்கிட்டு உங்களுக்கு 19 நாட்கள் அவகாசம் கொடுத்திருப்பார்கள். ஏனெனில் ஜூலையில் உயர்த்தப்பட்ட கட்டணம் ஆகஸ்ட் இறுதியில் எடுக்கப்பட்ட மின் கணக்கீட்டின் போது வரும். அந்த வகையில் மின் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வந்துள்ளது. இதனை எப்படி குறைப்பது என்று யோசிக்கிறீர்களா.. அப்படி என்றால் இதனை கவனியுங்கள். https://tnebcalculator-gowdham.netlify.app/ என்ற தளத்தில் போய் உங்கள் வீட்டு மின் கட்டணம் எப்படி ஏறி உள்ளது என்பதை அறிய முடியும்.
உதாரணமாக ஒரு வீட்டிற்கு இந்த மாதம் 1622 ரூபாய் கட்டணம் வந்துள்ளது. ஏசி பயன்பாடு உள்ள அந்த வீட்டில் எத்தனை யூனிட் ஓடியுள்ளது என்பதை வெப்சைட்டில் கணக்கிட முடியும். அப்படி கணக்கிட்டு பார்த்தால் 471 யூனிட் ஓடியிருக்கிறது. இந்த 471 யூனிட்டில் முதல் 100 யூனிட்டிற்கு கட்டணம் இல்லை.. இரண்டாவது 100 யூனிட்டிற்கு வெறும் 225 ரூபாய் தான் கட்டணம். ஆனால் அதற்கு மேல் போகும் மின்சார யூனிட்டிற்கு கட்டணம் அதிகம் ஆகும். அதாவது 200 முதல் 400 வரை ஓடும் யூனிட்டிற்கு கட்டணம் 900 ஆகும். அதேபோல் 400 முதல் அதற்கு மேல் உள்ள 71 யூனிட்டிற்கு கட்டணம் 447 ரூபாய் ஆகும். இப்படித்தான் எல்லா வீட்டிற்கு மின் கட்டணம் கணக்கிடப்படும்.
ஒருவேளை 571 யூனிட் ஓடியிருக்கிறது என்றால் மொத்த மின் கட்டணம் 2636 ரூபாய் என்று வந்திருக்கும். இந்த மின் கட்டணத்தை பொறுத்தவரை முதல் 100 யூனிட்டிற்கு கட்டணம் இல்லை.. ஆனால் அடுத்த 101 முதல் 400 வரை உள்ள மின் யூனிட்டிற்கு 1350 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். 500 முதல் 571 யூனிட்டிற்கு கட்டணம் 596 ரூபாய் ஆக இருக்கும்.
எனவே மின் கட்டணத்தை குறைக்க என்ன செய்யலாம். உங்கள் வீட்டில் ஏசி, வாசிங் மெஷின், ஸ்மார்ட் டிவி, 3 பேன்கள், ஃபிரிட்ஜ் போன்றவை உள்ளது என்றால்,அதில் ஏசி பயன்பாடு என்பது ஒரு நாளைக்கு குறைக்க முடியும் என்பதை பார்க்க வேண்டும். சிலர் கூலிங் வேண்டும் என்பதற்காக 18ல் வைப்பார்கள். நன்றாக கூலிங் மாறிய பின்னர் 18 என்பதை 24 ஆக மாற்றுவார்கள்.
ஆனால் 24இலேயே வைத்தால் மின் கட்டணத்தை ஓரளவு சேமிக்கலாம். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் ஏசி போடுகிறீர்கள் என்றால், 4 மணி நேரம் ஏசியும், 4 மணி நேரமும் ஃபேனையும் பயன்படுத்தலாம். அதேநேரம் தேவையற்ற இடங்களில் மின்விசிறி மற்றும் லைட் எரிவதை கட்டுப்படுத்த வேண்டும். இதன் மூலம் கணிசமான தொகையை மிச்சப்படுத்தலாம்.ஏசியை பொறுத்தவரை 1.5 டன் ஏசி ஒரு மணி நேரம் ஓடினால் 1.5 யூனிட் வரை மின்சாரம் செலவாகும்.
ஒரு நாளைக்கு 4 மணி நேரம் ஏசி ஓடினாலே 6 யூனிட் ஏசிக்கு ஓடும். அந்த வகையில் 60 நாளில் 360 யூனிட் ஏசிக்கு ஓடும். இதே எட்டுமணி நேரம் ஓடினால்.. 720 யூனிட் ஏசிக்கு மட்டுமே ஓடும் வாய்ப்பு உள்ளது. இதில் ஏசியின் ஸ்டார் ரேட்டிங்கை பொறுத்து வேறுபாடுகள் வரலாம். ஆனால் ஏசி பயன்பாட்டை கணிசமாக குறைப்பதன் மூலம் மட்டுமே மின் கட்டணத்தை குறைக்க முடியும்.. ஏனெனில் ஏசி இல்லாத ஒரு வீட்டில் மின் கட்டணம் அதிக பட்சம் 500 தான் வந்தது. ஏசி வந்த பின்னர் 1622 ரூபாய் என்று வந்துள்ளது.












Click it and Unblock the Notifications