அடுத்தடுத்த 2 சம்பவம்.. "அனுமதிக்க கூடாது".. முதல்வர் ஸ்டாலினின் ஸ்டிரிக்ட் உத்தரவு! ஆக்சனில் போலீஸ்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த 2 முக்கியமான சம்பவங்களை போலீசார் மிகவும் கவனமாகவும், வேகமாகவும் கையாண்டதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து முக்கியமான சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.. அது என்ன சம்பவம்.. என்ன உத்தரவு என்று பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 1 மாதமாக தீவிரமாக பிரச்சாரங்கள் நடந்த நிலையில் நேற்று காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணி வரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தீவிரமாக நடைபெற்றது.
ஹிஜாப்பை அகற்றச் சொன்ன பாஜக பூத் முகவர்.. தட்டித் தூக்கிய மதுரை போலீசார்.. 4 பிரிவுகளின் கீழ் வழக்கு
பெரும் பாதுகாப்பிற்கு இடையில் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காத வகையில் இந்த தேர்தல் நடந்து முடிந்தது.
என்ன சம்பவம்
இந்த நிலையில்தான் நேற்று தேர்தலில் நடைபெற்ற சம்பவம் ஒன்றில் போலீசார் மிகவும் கண்டிப்பான நடவடிக்கைகளை எடுத்தனர். மதுரை மேலூரில் பாஜக முகவர் கிரிராஜன் வாக்குசாவடியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஹிஜாப் அணிந்து வந்த காரணத்தினால், இஸ்லாமிய வாக்காளர் உள்ளே வர கூடாது. ஹிஜாப்பை அகற்ற வேண்டும், ஹிஜாப் அணிந்து வந்து கள்ள ஓட்டு போடுகிறார்கள் என்று கூறி கடுமையான வாக்குவாதம் செய்தார்.
போலீசார் ஆக்சன்
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு இருந்த தேர்தல் நிர்வாகிகள் உடனே பாஜக முகவர் கிரிராஜனை வெளியே அனுப்பினார்கள். இந்த சம்பவம் தெரிந்தவுடன் மதுரை மேலூர் போலீசார் துரிதமாக செயல்பட்டு கிரிராஜனை அழைத்து விசாரித்தனர். என்ன நடந்தது? ஏன் இப்படி அவர் செய்தார் என்று விசாரித்தனர். அதோடு கிரிராஜனுக்கு எதிராக ஏற்கனவே சில புகார்கள் இருப்பதையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீசார் கிரிராஜனை கைது செய்தனர்.
வழக்கு
இவருக்கு எதிராக 4 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. மற்றொரு மதத்தைச் சேர்ந்தவரை இழிவுபடுத்தும் படி பேசுதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியே வந்ததும் தமிழ்நாடு போலீசுக்கு இதில் துரிதமாக நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துரிதமான நடவடிக்கை
சம்பந்தப்பட்ட பாஜக பிரமுகரை உடனே விசாரித்து நடவடிக்கை எடுங்கள். இது ஹிஜாப் விஷயம். கர்நாடகாவில் நடந்தது போல இங்கு எதுவும் நடக்க கூடாது. அதற்கு இடம் அளிக்க கூடாது. உடனே அந்த பாஜக பிரமுகரை விசாரியுங்கள் என்று அரசு தரப்பு உத்தரவிட்ட நிலையில்தான் போலீஸ் துரிதமாக செயல்பட்டு அவரை கைது செய்துள்ளது. தேர்தல் நேரத்தில் மற்ற பிற இடங்களில் இது போன்று நடக்க கூடாது என்பதால் இந்த நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஸ்டிரிக்ட்
சமீபத்தில் ஏபிவிபி நிர்வாகிகள் கைதிலும் இதேபோல் முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்ததாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரியலூர் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு இரண்டு நாட்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் வீடு முன் ஏபிவிபி அமைப்பினர் போராட்டம் செய்தனர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி நடத்திய போராட்டத்தில் 32 பேர் தமிழ்நாடு போலீசார் மூலம் கைது செய்யப்பட்டனர். இதில் 29 பேர் சிறையில் உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
முதல்வர் வீடு முன் இந்த போராட்டம் நடந்ததும் போராட்டக்காரர்களை மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் விடாமல், போலீஸ் கண்டிப்புடன் செயல்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தது. அதோடு இவர்களின் பெயிலுக்கு எதிராகவும் அரசு தரப்பு தீவிர வாதம் வைத்து வருகிறது. இதில் 12 ஏபிவிபி நிர்வாகிகள் பொய்யான விலாசம் கொடுத்து ஏமாற்றியதை சுட்டிக்காட்டி போலீசார் தரப்பு பெயில் வழங்க கூடாது என்று வாதம் வைத்து வருகிறது.
உத்தரவு என்ன?
இதிலும் கண்டிப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதல்வர் தரப்பு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இப்படி போராட்டங்களை அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும். மத ரீதியான பிரச்சனைகள் ஏற்படும். அதை அனுமதிக்க கூடாது. போராடியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று போலீசுக்கு முதல்வர் தரப்பில் இருந்து உத்தரவு சென்றதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்தே ஏபிவிபி வழக்கிலும் போலீஸ் கண்டிப்பு காட்டியதாக அரசு தரப்பு தெரிவிக்கிறது.
கண்டிப்பான நடவடிக்கை
அதேபோல் இதில் ஏபிவிபி மாணவ, மாணவியர் பொய் விலாசம் கொடுத்த விஷயத்திலும் போலீசார் தரப்பு இன்னொரு வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது. போலீஸ் இப்படி கண்டிப்புடன் இருப்பதை அறிந்தே ஏபிவிபி அதன்பின் தமிழ்நாட்டில் போராட்டத்தை நடத்தாமல் டெல்லிக்கு போராட்டத்தை மாற்றி உள்ளது. டெல்லி தமிழ்நாடு இல்லம் முன் ஏபிவிபி அமைப்பு போராடியது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வாரத்தில் நடந்த இந்த 2 சம்பவங்களை போலீசார் மிகவும் கவனமாகவும், வேகமாகவும் கையாண்டதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.