ஒண்ணு சாதகம்.. இன்னொண்ணு பாதகம்.. வேலுமணி மீதான டெண்டர் வழக்கு ரத்தானது எப்படி? சொல்கிறார் இன்பதுரை!
சென்னை : திமுக அரசு, அதிமுகவினரை பழிவாங்குகிறது என ஓங்கி அறைந்து உண்மையைச் சொல்லி இருக்கிறது இந்தத் தீர்ப்பு எனக் கூறியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை.
முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது.
இந்நிலையில், வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் இன்பதுரை.
ஜேஜே திரைப்பட நடிகரின் பரிதாபமான நிலை.. நண்பரால் ஏமாற்றம்.. திறமை இருந்தும் இந்த ஒரு நிலைமையா?
வேலுமணி மீதான வழக்கு
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
சொத்துக்குவிப்பு வழக்கு
இதில் டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.பொன்னி ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கை கை விடுவது என அரசு முடிவு செய்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக டெண்டர் முறைகேடு தொடர்பாகவும், வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும் குற்றம் சாட்டி இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஒரு வழக்கு ரத்து
இந்த இரண்டு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பி என் பிரகாஷ் மற்றும் டீக்கா ராமன் அடங்கிய அமர்வு, வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. அதே சமயம் அவருக்கு எதிரான சொத்துக் குறிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள், இது தொடர்பான அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
சட்டத்திற்கு முரணானது
இந்த உத்தரவுகள் பற்றி வேலுமணி தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "அதிமுக ஆட்சியிலேயே வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு புகாருக்கு முகாந்திரம் இல்லை என லஞ்ச ஒழிப்புத்துறை ஆரம்ப விசாரணை அறிக்கை தாக்கல் செய்த நிலையில், திமுக அரசு ஆட்சிக்கு வந்தபிறகு மீண்டும் பொய்யாக எஃப்.ஐ.ஆர் போட்டார்கள். அது தவறு என நாங்கள் வாதிட்டோம். ஒரு வழக்கில் இரண்டு ஆரம்ப கட்ட விசாரணை நடத்துவது சட்டத்திற்கு முரணானது. இதனை நீதிமன்றத்தில் நாங்கள் எடுத்து வைத்தோம்.
அதிமுக மீது அடக்குமுறை
ஆதனை ஏற்றுக்கொண்டு நீதிமன்றம், வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்துள்ளது. இதன் மூலம் பொய்யான புகாரை திமுக அரசு செய்கிறது, அதிமுக மீது அடக்குமுறையை ஏவ லஞ்ச ஒழிப்புத்துறையை பயன்படுத்துகிறது என்பது புலனாகிறது. வேலுமணியை பழி வாங்க லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்குவிப்பு வழக்கு ஒன்றைப் போட்டிருந்தது. அந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வந்ததில், வேலுமணியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
நல்ல உதாரணம்
அதிமுக மீது சேற்றை வாரி இறைக்க வேண்டும் என்பதற்காக திமுகவின் பி டீமாக செயல்படக்கூடிய அறப்போர் இயக்கம் தான் இந்த வழக்கை தொடர்ந்தது. இன்று நீதிமன்றம் அந்த வழக்கையே ரத்து செய்திருக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்களின் மீது போடப்பட்ட வழக்குகள் எல்லாம் பொய் வழக்குகள், அதிமுகவின் குரல்வளையை நசுக்க வேண்டும், எதிர்க்கட்சிகள் இருக்கக்கூடாது என நினைக்கிற பாசிச அரசு நடைபெறுகிறது என்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு நல்ல உதாரணம். ஏனென்றால் பொய் வழக்கு என்று கூறி இதனை ரத்து செய்திருக்கிறார்கள்.
ஓங்கி அறைந்து
ஊழல் மூலமாக சம்பாதித்த பணத்தில் சொத்துக் குவித்ததாக வழக்கு இருக்கிறது. ஆனால், வேலுமணி ஊரில் இருப்பவர்கள், அவரைச் சுற்றி இருப்பவர்களின் சொத்துகளை எல்லாம் கொண்டு வந்து வேலுமணியின் சொத்து எனக் காட்டி இருக்கிறார்கள். அந்த வழக்கும் இல்லாமல் போகும். மேற்கொண்டு ஆலோசனை நடத்தி மேல்முறையீடு பற்றி முடிவெடுப்போம்.
திமுக அரசு அதிமுகவினரை பழிவாங்குகிறது என எல்லோருக்கும் ஓங்கி அறைந்து உண்மையைச் சொல்லி இருக்கிறது இந்தத் தீர்ப்பு." எனக் கூறியுள்ளார்.