இன்ஸ்பெக்டர் விவகாரம்.. கலெக்டருக்கு எதிராக காஞ்சிபுரத்தில் போஸ்டர்.. மனித உரிமை ஆணையமும் நோட்டீஸ்
கலெக்டர் பொன்னையாவுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது
சென்னை: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்திவரதர் வைபவத்தின்போது இன்ஸ்பெக்டரை அவமரியாதையாக பேசியது ஏன் என்பது குறித்து பதிலளிக்கவும் மனித உரிமைகள் ஆணையம் கலெக்டருக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
3 தினங்களுக்கு முன்பு, அத்திவரதர் தரிசனத்தின்போது, பொதுமக்கள் முன்னிலையிலேயே மாவட்ட கலெக்டர் பொன்னையா, இன்ஸ்பெக்டர் ஒருவரை திட்டியதும், ஒருமையில் பேசியதும் வீடியோவாக வெளிவந்து இணையத்தில் பரபரப்பானது.
கலெக்டர் இப்படி பேசியது மிகப்பெரிய விவாத பொருளாக மாறி, சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று இந்த சம்பவத்துக்கு கலெக்டரே பகிரங்கமாக வருத்தம் தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்தார்.
"ஏதோ உணர்ச்சி வசப்பட்டு பேசிட்டேன், பெரிசுபடுத்த வேண்டாம்" என்று மன்னிப்பு கேட்டார். எனினும், இந்த விஷயத்தை மனித உரிமை ஆணையம்விடவில்லை. தானாக விஷயத்தை முன்வந்து விசாரணையை கையில் எடுத்துள்ளதுடன், இன்ஸ்பெக்டரை திட்டியது பற்றி பதிலளிக்க கலெக்டர் பொன்னையாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அது மட்டுமில்லை.. பொதுமக்கள், காவலர்கள் முன்பு இன்ஸ்பெக்டரை திட்டியது மனித உரிமை மீறல் ஆகாதா என்று கேள்வி எழுப்பியுள்ள மனித உரிமை ஆணையம், ஆட்சியர் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கேட்டுள்ளது. மேலும், ஆட்சியர் மீதான நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளர் மற்றும் தமிழக டிஜிபி உள்துறை செயலாளருக்கும் 2 வாரங்களில் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்திவரதர் தரிசனத்துக்கு இன்னும் 3 நாள்களே உள்ள நிலையில், ஒரு பக்கம் கலெக்டர் பொன்னையாவுக்கு எதிராக காஞ்சிபுரத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருவதும், இன்னொரு பக்கம், மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.