தனித் தமிழ்நாடு கோரிக்கையை நான் பேசவே இல்லை: அண்ணாமலைக்கு விசிக வன்னி அரசு பதில்
சென்னை: தமிழ்நாட்டை இந்திய ஒன்றியத்தில் தனித்துவமான நாடாகத்தான் மாற்றுவோம் என்று பேசினேனே தவிர தனித் தமிழ்நாடு கோரிக்கையை முன்வைக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு விளக்கம் அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தில் செங்கொடியின் 11-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் வன்னி அரசு பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் வன்னி அரசு பேசியதாவது: விடுதலைப் புலிகளின் நிழலாக மக்கள் மன்றம் ஒவ்வொரு ஆண்டும் செங்கொடி நினைவு நாளை நடத்தி வருகிறது. சனாதனத்தை நிலை நிறுத்த, தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமூகத்தை இன்று அழித்தொழிக்க முயற்சி செய்கிறார்கள். அந்த அநீதியான சக்திகளுக்கு எதிராகப் போராட வேண்டிய பொறுப்பும் தேவையும் நிறைய இருக்கிறது. கிராமம் கிராமமாக நாம் செல வேண்டிய தேவை இருக்கிறது. சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம்; ஜனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்துவோம் என்று திருமாவளவன் தமது பிறந்த நாள் செய்தியாக தெரிவித்தார். கிராமங்கள் நோக்கி ஓராண்டு காலம் நாங்கள் சனாதன சக்திகளுக்கு எதிராக கிராமம் கிராமமாக செல்கிறோம்; தந்தை பெரியார், அம்பேத்கர் கருத்தியலோடு கிராமங்களுக்கு செல்கிறோம்.

சனாதன சக்திகளுக்கு எதிராக களமாடுவதில் எங்கள் உயிரே போனாலும் கவலைப்படமாட்டோம். சனாதன சக்திகளை வீழ்த்துவது, தமிழ்நாட்டை முழுமையான தமிழ்நாடாக மாற்றுவது என்கிற அடிப்படையில்தான் விடுதலை சிறுத்தைகள் களமாடுகிறோம். தமிழ்நாடு தனித்துவமான நாடு செங்கொடியின் இந்த நினைவுநாளில் விடுதலை- தமிழ்நாடுடைய முழுமையான விடுதலை, தமிழ்- தமிழருடைய உரிமை, இந்திய ஒன்றியத்தில் இருந்து தமிழ்நாடு என்பது ஒரு தனித்துவமான நாடு என்பதை அடைவது என்பதுதான் செங்கொடிக்கு நாம் செலுத்தக் கூடிய கடமை. இவ்வாறு வன்னி அரசு கூறினார்.
வன்னி அரசு, தனித்துவமான தமிழ்நாடு என பேசியது தனித் தமிழ்நாடு எனும் பிரிவினையை வலியுறுத்திதான் என தமிழக பாஜகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக வன்னி அரசு அளித்த விளக்கத்தில், என்னுடைய பேச்சை அண்ணாமலை முழுமையாக கேட்க வேண்டும். தமிழ்நாடு ஒரு தனித்துவமான மாநிலம். அதனடிப்படையில்தான் பேசினேன். பிரிவினைவாதத்தை முன்வைத்து நான் பேசவில்லை
என்றார்.












Click it and Unblock the Notifications