''எந்த துன்பம் வந்தாலும் முல்லைப்பெரியாறு அணையை காப்பேன்''.. மக்கள் மத்தியில் சீமான் சபதம்!
சென்னை: முல்லைப் பெரியாறு அணையை இடிக்கும் நோக்கில் அத்துமீறி செயல்படும் கேரள அரசை கண்டித்தும், தடுக்கத் தவறிய ஒன்றிய அரசை கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணை நீர் திறப்பு உரிமையை கேரளாவுக்குத் தாரைவார்த்த தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் தேனியில் போராட்டம் நடந்தது.
தொடர் கனமழை... வடியாத வெள்ளம் 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தேனி பங்களாமேடு பகுதியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், பாசறைப் பொறுப்பாளர்களும், விவசாயிகளும், சமூகச் செயற்பாட்டாளர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
நாம் தமிழர் கட்சி போராட்டம்
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பறிபோகும் தமிழ்நாட்டின் நதிநீர் உரிமையை மீட்டெடுக்கவும், உணவளித்து உயிர்காக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள். இதில் தமிழ்தேச தன்னுரிமைக் கட்சித் தலைவர் அ. வியனரசு, தமிழர் தாயகம் கட்சித் தலைவர் கு. செந்தில்மள்ளர், மருது மக்கள் இயக்கத் தலைவர் செ.முத்துப்பாண்டி உள்ளிட்ட பலர் கண்டன உரை நிகழ்த்தினர்.
கேரளாவின் அடாவடி செயல்
இந்த போராட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-
முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதென கேரள அரசின் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது உச்சநீதிமன்றம் நிர்ணயித்த குறைந்தபட்ச நீர்மட்டமான 139.5 அடியை எட்டுவதற்கு முன்பாகவே, அணையின் நீர்மட்டம் 136 அடியாக இருந்தபோதே, கேரள அமைச்சர்ள் அத்துமீறி நுழைந்து அணையைத் திறந்து அடாவடிச் செயல் புரிந்துள்ளனர்.
|
தமிழக அரசு கைகட்டி வேடிக்கை
இதனை தடுக்க வேண்டிய தமிழக அரசு கைகட்டி வேடிக்கை பார்த்ததோடு மட்டுமல்லாமல், தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் அக்கொடுங்கோன்மைச் செயலை நியாயப்படுத்த முயன்று வருகிறது. திமுக அரசின் கையாலாகத்தனத்தை காட்டுகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
155 அடிவரை கொள்ளளவு உடைய முல்லைப்பெரியாற்று அணையில் பல்வேறு சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு 142 அடிவரை மட்டுமே நிரப்புவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது.
பேராபத்து ஏற்படும்
தற்போது அதனையும் காவு கொடுத்து 136 அடியாகக் குறைப்பதென்பது ஏறத்தாழ அணையின் மொத்த நீர் கொள்ளளவில் பாதியளவை மட்டுமே நிரப்ப வழிவகுப்பதோடு முல்லைப் பெரியாற்று பாசன வேளாண்மை முற்றுமுழுதாக அழியும் பேராபத்து ஏற்படும். முல்லைப் பெரியாறு அணையை கேரள அரசு இடிக்க அனுமதியாமல் எத்தகைய இடர்கள் வந்தாலும் எதிர் நின்று காப்போம். இவ்வாறு சீமான் பேசினார்.