டிஎன்பிஎஸ்சிக்கு புதிய செயலாளர்.. ஐஏஎஸ் அதிகாரி கோபால சுந்தரராஜ் நியமனம்.. யார் இவர் தெரியுமா?
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி கோபால சுந்தரராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை ஆண்டுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எழுதி வருகின்றனர்.

இந்நிலையில் தான் சமீபகாலமாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தொடர்பாக விவாதம் எழுந்து வருகிறது. அதாவது டிஎன்பிஎஸ்சியை பொறுத்தமட்டில் தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் இருப்பார்கள். ஆனால் தற்போது தலைவர் இல்லை. 14 உறுப்பினர்களில் 4 பேர் மட்டுமே உள்ளனர்.
தமிழக காவல்துறை டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்ற சைலேந்திர பாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து அவரை டிஎன்பிஎஸ்சி தலைவராகவும், வேறு 8 பேரை டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாகவும் நியமிக்க ஆளுநர் ஆர்என் ரவிக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர் ஒப்புதல் அளிக்காமல் கோப்புகளை திருப்பி அனுப்பினார்.
இந்த பதவிகளுக்கான விண்ணப்பம் குறித்து வெளியிடப்பட்ட விளம்பரம் உள்ளிட்டவற்றை ஆளுநர் கேட்டார். இதையடுத்து, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதாகக் கூறி மீண்டும் ஆளுநருக்கு ஃபைல் அனுப்பப்பட்டது. இதையடுத்து வெளிப்படைத்தன்மை இல்லை என அவர் மீண்டும் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க திடீரென்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஷ்வரி சில நாட்களுக்கு முன்பு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக இந்த பொறுப்பில் நீடித்து வந்த நிலையில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அவரை வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றினார். அதோடு அவரது பதவிக்கு வேறு யாரும் நியமனம் செய்யப்படவில்லை. டிஎன்பிஎஸ்சி செயலாளர் என்பது நிர்வாக சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பாகும். ஏற்கனவே தலைவர், உறுப்பினர்கள் இல்லாத நிலையில் அவரது பணி இடமாற்றம் விவாதமானது.
அதாவது டிஎன்பிஎஸ்சியை பொறுத்தமட்டில் ஒவ்வொரு ஜனவரி மாதமும் அந்த ஆண்டில் நடக்கும் தேர்வுகள் குறித்த அட்டவணை என்பது வெளியிடப்படும். மேலும் குரூப் 2 தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாக நிலையில் சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பெண்டிங்கில் இருக்கும் நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் வருத்தமடைந்தனர்.
இத்தகைய சூழலில் தான் டிஎன்பிஎஸ்சி செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி கோபால சுந்தராஜ் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் செயலாளர் (பொறுப்பு) அனுப் யாதவ் ஐஏஎஸ் வெளியிட்டுள்ளார். இவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். கீழக்கரை அருகே மாவிலா தோப்பு எனும் கிராமம் தான் இவரது சொந்த கிராமமாகும். இவரது தந்தை பெயர் சண்முகவேல். இவர் விவசாயி.
கோபால சுந்தராஜ் கோவை விவசாய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர் முதுகலை பட்டப்படிப்பை டெல்லியில் முடித்தார். கடந்த 2012ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தார். தூத்துக்குடி மாவட்ட சாராட்சியர், சென்னை பெருநகர மாநகராட்சியில் துணை ஆணையாளர், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய இணை மேலாண் இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனராக பணியாற்றிய அனுபவம் கொண்டார்.
மேலும் இவர் கடந்த 2021ல் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார். சொந்த ஊரில் அவர் கலெக்டராக நியமனம் செய்யப்பட்டது விவாதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பதில் தென்காசி மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டு பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications