பாஜக போட்டியிடாத பட்சத்தில்.. நிச்சயம் ஓபிஎஸ் வேட்பாளரை அறிவிப்பார்.. ஜேசிடி பிரபாகர் சொன்ன பாய்ண்ட்
பாஜக போட்டியிடவில்லை என்றால், ஓபிஎஸ் வேட்பாளரை அறிவிப்பார் என்று ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாத பட்சத்தில் ஓபிஎஸ் நிச்சயம் வேட்பாளரை அறிவிப்பார் என்று ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். அதேபோல் ஓபிஎஸ் தரப்பில் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் உட்கட்சி மோதல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மூலம் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினையால் தனித்தனியாக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இரண்டு தரப்பில் இடைத்தேர்தலில் வேட்பாளரை களமிறக்க பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே சில நாட்களுக்கு முன், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால், அக்கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று ஓபிஎஸ் அறிவித்திருந்தார். இருப்பினும் இரு தரப்பிலும் கமலாலயம் சென்று ஆதரவு கோரப்பட்டது. அதேபோல் ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக இதுநாள் வரை தங்களது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

ஆர்வம் காட்டும் இபிஎஸ்
அதேபோல் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு பூத் கமிட்டி முதல் மெகா தேர்தல் பணிக்குழு, வேட்பாளர் தேர்வு என அடுத்தடுத்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காகவும் உச்சநீதிமன்றத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு நாடியுள்ளது.

தேர்தல் பணிக்குழு
ஆனால் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் அறிவிப்படுவார் என்று மட்டுமே சொல்லி வந்தது. இந்த நிலையில் சென்னையில் திடீரென ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முடிவில், ஓபிஎஸ் தரப்பில் வைத்திலிங்கம் தலைமையில் 118 பேர் கொண்டு தேர்தல் பணிக்குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

வேட்பாளர் அறிவிப்பு எப்போது?
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் கூறுகையில், வைத்திலிங்கம் தலைமையில் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவதாக இருந்தால், முழு ஆதரவு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக எப்போது வேட்பாளர் அறிவித்தாலும், அவர்களுக்காக பணியாற்றவே தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

பாஜக நிலைப்பாடு
பாஜக போட்டியிடவில்லை என்று வேறு முடிவை எடுத்தால், நிச்சயம் அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் வேட்பாளரை அறிவிப்பார். அதிமுக ஒருங்கிணைந்து ஒரு முடிவை எடுத்திருந்தால், எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது. ஈரோடு இடைத்தேர்தலில் தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதால், பாஜக போட்டிடுவதே சரியாக இருக்கும்.

ஓபிஎஸ் காத்திருப்பு
பாஜகவின் நிலைப்பாட்டிற்காக காத்திருக்கிறோம். பாஜக போட்டியிடவில்லை என்றால், எங்கள் தரப்பில் வேட்பாளரை நிறுத்துவதில் எந்த தயக்கமும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தரப்பில் பணிகளை தொடங்கி இருக்கலாம். ஆனால் எதை எப்போது செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ்-க்கு தெரியும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications