பாஜகவை சேர்ந்த எந்த பெண்ணாவது பாலியல் புகார் கொடுத்துள்ளாரா? குஷ்பு கேள்வி
சென்னை: பாஜகவில் எந்த தலைவர் மீது, ஏதாவது பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளதா, அவ்வாறு கொடுக்கப்பட்டால், அந்த பெண்ணுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த கே.டி.ராகவன் தனது மொபைல் போனில் ஆபாச வீடியோ சாட்டிங் செய்ததாக ஒரு வீடியோ வெளியான நிலையில், மாநில பொதுச் செயலாளர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் தன் மீது தவறு இல்லை என்றும், சட்டப்படி சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

நெட்டிசன்கள்
இந்தநிலையில் பாஜகவில் உள்ள பெண் தலைவர்களான வானதி சீனிவாசன், குஷ்பு, காயத்ரி ரகுராம் போன்றவர்கள் இந்த சர்ச்சைகள் தொடர்பாக இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்று கூறி பிற கட்சிகளை சேர்ந்த பல நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் குரல் எழுப்புவதை பார்க்க முடிகிறது.

பெண் தலைவர்கள்
இப்படித்தான் இன்று திவ்யா என்ற பெண் ஒருவர், பாஜகவில் இருக்கும் பெண்களின் பாதுகாப்புக்கு வழி என்ன.. இப்பவாவது கருத்து சொல்வீர்களா இல்லை அரசியல் செய்துகொண்டு இருக்க போறீங்களா, என்று , வானதி சீனிவாசன், குஷ்பு மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோர், டுவிட்டர் கணக்குகள் டேக் செய்து கேள்வி எழுப்பினார்.

புகழுக்காக கேள்வி
இதற்கு பதிலளித்துள்ள குஷ்பு, மோசமான திராவிட மனப்பான்மையோடு கவனத்தை ஈர்ப்பதற்கு நீங்களும் முயற்சி செய்ய வேண்டாம். போராளிகள் என்று கூறிக்கொள்பவர்கள் நேரம் இருந்தால் என்னுடைய டுவிட்டர் பதிவுகளை பார்க்கலாம். இரண்டு நிமிட புகழுக்காக எங்களை ட்விட்டரில் டேக் செய்ய வேண்டாம். ஒரு பெண் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

திமுகவினர் கேலி செய்கிறார்களாம்
இன்னொரு ட்விட்டர் பதிவில், திமுக கட்சியினர் கிண்டல் கேலி செய்து வருவதை நான் அறிந்திருக்கவில்லை. இது கவலைக்குரிய விஷயம் என்று தெரிவித்திருந்தார். சோனியா அருண்குமார் என்ற நெட்டிசன் குஷ்புவிடம் , பாஜகவில் பெண் தொண்டர்களின் நிலைமை மோசமாக இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார். அவருக்கும் பதில் அளித்துள்ளார் குஷ்பு.

புகார் சொன்னால் துணை நிற்போம்
பாஜக கட்சியை சேர்ந்த யாராவது ஒரு பெண் யார் மீதாவது பாலியல் சீண்டல் செய்ததாக புகார் சொல்லி இருக்கிறார்களா.. அப்படி பெண்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆதரவாக தான் நாங்கள் இருப்போம். இதில் கட்சி பார்க்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார் . மேலும் இது தொடர்பாக கேள்வி கேட்பவர்களை கவனத்தை ஈர்ப்பதற்காக இவ்வாறு தனக்கு கேள்விகளை முன் வைக்கிறார்கள் என்று குஷ்பு டுவிட்டரில் காட்டமாக விமர்சனம் செய்வதை கவனிக்க முடிகிறது.












Click it and Unblock the Notifications