புகழ்ந்து பேசினால் விருது கொடுப்பாங்களா?.. இளையராஜா சொன்னது அவர் கருத்து - சீமான் நச் பதில்
மோடியைப் பற்றி இளையராஜா சொன்னது அவரது சொந்த கருத்து என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னை: இளையராஜா சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து அதற்காக அவரை விமர்சனம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
அம்பேத்கார் அன்ட் மோடி என்கிற புத்தகத்திற்கு இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில், "பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" என்று பிரதமர் மோடியைப் புகழ்ந்து எழுதியுள்ளார்.
காஷ்மீர் செல்லும் பிரதமர் மோடி! சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் முதல் பயணம்.. எப்போது தெரியுமா
இளையராஜாவுக்கு எதிரான கருத்து
மோடியை புகழ்வது அவரது உரிமை என்றாலும், அம்பேத்கருடன் மோடியை ஒப்பீடு செய்ததுதான் தவறு என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்துவந்த நிலையில், பாஜகவின் அகில இந்தியத் தலைவர் ஜே.பி நட்டா வெளியிட்ட அறிக்கையில் "இந்தியாவின் மூத்த இசைமேதையாக உள்ள இளையராஜாவுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவது தமிழகத்தில் ஆளும்தரப்பிற்கு நெருக்கமானவர்கள் வசைப்பாடுவது சரியா" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
பாரத ரத்னா விருது
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இளையராஜா எந்தக் கட்சியையும் சேர்ந்தவரல்ல. அவர் மக்களின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்றவர் அவருக்கு உயரிய விருதான பாரத ரத்னா கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
சீமான் கருத்து
ஒரு சாரார் இளையராஜாவை விமர்சித்தும், அவருக்கு கண்டனம் தெரிவித்தும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். என்னுடைய கருத்தை நான் திரும்ப பெறப்போவதில்லை என்றும் இளையராஜா கூறியுள்ளார். இளையராஜாவிற்கு ஆதரவான கருத்துக்களும் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவரோ, புகழ்ந்து பேசினால் விருது கொடுப்போம் என்கிறார்கள் என்றார்.
இதில் நான் என்ன சொல்வது?
இளையராஜா சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து. அதை ஏற்கிறோமா? எதிர்கிறோமா என்பது வேறு என்று சீமான் கூறினார். அதற்காக இளையராஜாவை விமர்சனம் செய்ய வேண்டியது இல்லை. இதை விட அதிகமாக பலரும் பிரதமர் மோடியை புகழ்ந்திருக்கிறார்கள் என்றும் சீமான் கூறினார்.
Recommended Video
இளையராஜாவை திட்டுவது யார்
இளையராஜாவை புகழ்ந்து பேசிய பலரும் இன்று அவரை திட்டுகின்றனர். மோடி போல எந்த தலைவரும் இல்லை என்று பெருமைபட பேசிய தலைவர்கள் பலரும் இருக்கிறார்கள். இளையராஜா அவருடைய கருத்தை பதிவு செய்துள்ளார் அதை விட்டு விட வேண்டியதுதான் அதை பெரிது படுத்த வேண்டியதில்லை என்று சொன்னார் சீமான்.