நான் முன்னாள் சபாநாயகர்.. இப்ப அந்த பதவியில் இருந்திருந்தால் ஒபிஎஸ் இருக்கமாட்டார் - ஜெயக்குமார்
சென்னை: தான் மட்டும் இப்போது சபாநாயகராக இருந்திருந்தால் சட்டமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடமளித்து இருக்க மாட்டேன் என்றும், ஜேசிடி பிரபாகர் ஓ.பன்னீர்செல்வத்தின் பினாமி எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "பொய் சொல்வதே திமுக அரசுக்கு வேலையாக உள்ளது. பல்வேறு பகுதிகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடாமல் உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
நீர் தேங்கியுள்ளதால் கொசுக்கள் தேங்கி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவி வருகின்றன. பருவமழை ஆரம்பக்கட்டத்திலேயே இந்த நிலை என்றால் போன வருடத்தை விட இந்த வருடம் அதிக மழை இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

சென்னை குழிகள்
பட்டுக்கோட்டை பிரபாகரன் என்பவர் வீட்டின் முன் பல மாதங்களாக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாததால் வீட்டில் பலருக்கு உடல்நிலை சரி இல்லாமல் போகிறது என்றும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வருத்தம் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதை நீங்களும் பார்க்கலாம்.

சீரழியும் சென்னை
எங்கள் ஆட்சிக்கும் இவர்கள் ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் என்றால் அதிமுக ஆட்சியில் வொர்க் மோர், டாக் லெஸ் என்று செயல்பட்டு வந்தோம். தற்போது திமுக அரசு டாக் மோர், வொர்க் லாஸ் என்று தான் செயல்பட்டு வருகிறார்கள். இது சிங்கார சென்னையாகவா இருக்கிறது? இன்று டெங்கு சென்னையாக, சீரழியும் சென்னையாக மாறி வருகிறது.

ராம்தாஸ் நகர்
இந்த ஆட்சியில் லேபிள் ஒட்டும் பணியை தான் செய்வார்கள் வேறு என்ன செய்வார்கள். நாங்கள் அடிக்கல் நாட்டிய பணிகளுக்கு மீண்டும் அடிக்கல் நாட்டுவார்கள். ராம்தாஸ் நகர் போன்ற பகுதிகளில் மக்கள் குடிசையில் இருந்தார்கள். அதற்காக கட்டிடம் கட்டினோம் அதை திறந்து வைக்க வேண்டியது தானே? 17 மாதங்களுக்கு அப்படியே கண்டுகொள்ளாமல் வைத்துள்ளனர்.

சேடிஸ்ட் அரசாங்கம்
நாங்கள் செய்து வைத்ததை அவர்கள் வந்ததும் திருப்பி செய்ய துவங்கி இருந்தால் இந்நேரம் பணிகள் முடிந்து திறப்பு விழா நடத்தி இருக்கலாம். அப்படி செய்திருந்தால் கூட பரவாயில்லை. நான் அடிக்கல் நாட்டியதற்கே மீண்டும் அடிக்கல் நாட்டினால் இது லேபிள் வேலை தானே. போஜராஜன் நகர் பகுதி மக்கள் ரேசன் கடைகளுக்கு 2 கிலோமீட்டர் போக்குவரத்து நெரிசலில் வர வேண்டி இருந்ததால் அங்கேயே ரேசன் கடை 30 லட்சத்தில் கட்டினோம். அதற்கு எனக்கு பேர் வந்து விடும் என்பதற்காக அதை திறக்கவில்லை. இது சேடிஸ்ட் அரசாங்கம்.

சபாநாயகர்
நான் கூட சபாநாயகராக இருந்தேன். அதற்கென்று மாண்புகள் , மரபுகள் உள்ளன. சபாநாயகர் மாண்புகளையும், மரபுகளையும் கடைபிடிப்பவரா இல்லை அதை மீறுபவரா? அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுவிட்டார். இதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. நான் சபாநாயகராக இருந்தால் ஓபிஎஸ்க்கு இடம் அளித்து இருக்கமாட்டேன்." என்றார்.

ஓபிஎஸ்-இன் பினாமி
ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்த குற்றச்சாடு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த இவர், "ஓபிஎஸ் பினாமி பணம் எல்லாம் அவரிடம் தான் உள்ளது. ஆதாரம் இல்லாமல் எது வேண்டுமானால் பேசலாம் என்று இல்லை. பகுத்தறிந்து ஆய்ந்து பேச வேண்டும். அவர்களிடம் திமுக தாக்கம் இருக்கிறது வேறு ஒன்றும் இல்லை." என்றார்.












Click it and Unblock the Notifications