சென்னையில் ஓடஓட விரட்டி பைனான்சியர் கொலை.. பட்டப்பகலில் 6 பேர் வெறிச்செயல்.. பதறவைக்கும் சம்பவம்
சென்னை: சென்னையில் பட்டப்பகலில் பைனான்சியர் ஒருவரை பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் விரட்டி விரட்டி வெட்டிக்கொன்றனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி நெஞ்சை பதற வைக்கும் நிலையில் தலைநகர் சென்னையில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சென்னை சேத்துப்பட்டுவில் உள்ள வைத்தியநாதன் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் 36. இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்ததோடு, வட்டிக்கும் பணம் கொடுத்து வந்தார்.
இவருக்கு சென்னை ஷெனாய் நகரில் அலுவலகம் உள்ளது. தினமும் அவர் அலுவலகத்துக்கு பைக்கில் செல்வது வழக்கம். சேத்துபட்டில் இருந்து நேற்று மதியம் பைக்கில் ஷெனாய் நகரில் உள்ள அலுவலகத்திற்கு ஆறுமுகம் சென்று கொண்டிருந்தார்.
செங்கல்பட்டு இரட்டை கொலை வழக்கு.. சீறிய துப்பாக்கி குண்டுகள்.. போலீஸ் என்கவுண்டரில் 2 பேர் பலி
ஓடஓட விரட்டி அரிவாள் வெட்டு
புல்லா அவென்யூ அருகே சென்றபோது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் ஆறுமுகத்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவரை அரிவாளால் வெட்டினர். இதை சற்றும் எதிர்பாராத ஆறுமுகம் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அங்கிருந்து ஓடினார். ஓடஓட அவரை விரட்டி சென்ற 6 பேர் கும்பல் சாலை மையத்தில் உள்ள தடுப்பின் அருகே சரமாரியாக வெட்டிவிட்டு மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து தப்பித்து சென்றனர்.
இறந்ததாக கூறிய டாக்டர்கள்
இதனால் ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து விழுந்து ஆறுமுகம் உயிருக்கு போராடினார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
முன்விரோதத்தில் கொலையா?
இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஆறுமுகம் மீது வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அதாவது சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் ஆறுமுகம் மீது 5 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், ரவடிகளான தட்சிணா மற்றும் காக்காதோப்பு பாலாஜி ஆகியோரின் கூட்டாளியாக ஆறுமுகம் செயல்பட்டதும் தெரியவந்தது. இதனால் முன்விரோதம் காரணமாக ஆறுமுகம் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பரவும் வீடியோ
இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் ஆறுமுகத்தை 6 பேர் கும்பல் நடுரோட்டில் வெட்டி போட்டுள்ள வீடியோ வெளியாகி உள்ளது. இதில் சாலை தடுப்பு சுவர் அருகே ஆறுமுகம் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடுகிறார். இது நெஞ்சை பதைபதைக்கும் வகையில் உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் தலைநகர் சென்னையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.