தமிழக அமைச்சரவை டிச. 24ல் கூடுகிறது… ஸ்டெர்லைட் பிரச்னை, மேகதாது அணை குறித்து விவாதிக்க வாய்ப்பு
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் டிசம்பர் 24-ம் தேதி பகல் 12 மணிக்கு கூடுகிறது.
தமிழகத்தில் தற்போது ஸ்டெர்லைட் பிரச்னை, மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் மீது எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு கடும் கண்டனத்துக்கு உரியது என்றும் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் புகார் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் டிசம்பர் 24-ம் தேதி பகல் 12 மணிக்கு கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட், மேகதாது அணை கட்டும் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வளத்துறையிடம் தாக்கல் செய்துள்ள அம்மாநில அரசு, புதிய அணை கட்ட ஒப்புதல் வழங்கும்படி கோரியிருந்தது.
கர்நாடக அரசு அனுப்பியிருக்கும் அறிக்கையை நீர்வளத்துறை பரிசீலிக்கக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால். மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தாக்கல் செய்த வரைவு அறிக்கைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அணை கட்டுவது தொடர்பாக தமிழகம் மற்றும் கேரள அரசுகளை தங்கள் கருத்தை தெரிவிக்குமாறும் மத்திய நீர்வள ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications