சினிமாவுக்கு வந்த பிறகு தான் மாறினேன்.. அதுவரை உடம்பை பற்றி கவலைப்படவில்லை -இயக்குநர் அமீர்
சென்னை: சினிமாவுக்கு வந்த பிறகு தான் உடல்நலன் மீது தாம் கவனம் செலுத்த ஆரம்பித்ததாகவும் அதுவரை அது பற்றி கவலைப்படவில்லை எனவும் இயக்குநர் அமீர் தெரிவித்திருக்கிறார்.
நடிகர்கள் மட்டுமே ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற பிம்பம் பரவலாக உள்ளதாகவும் ஆனால் அது உண்மையல்ல எனவும் அவர் கூறியிருக்கிறார்.
சினிமாவை கடந்து சமுதாயத்தின் மீது கொண்ட அக்கறை காரணமாக போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் உள்ள அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

போதைப் பொருள் தீமை
போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் மற்றும் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் World Fitness Federation (WFF) தேசிய அளவிலான உடற்கட்டமைப்பு மற்றும் உடற்தகுதி போட்டியை மதுரையில் நடத்துகிறார் இயக்குநர் அமீர். இந்தப் போட்டியை ஏன் நடத்துகிறேன் என்பதை அவரே விளக்கிக் கூறியிருக்கிறார். அதன் விவரம் வருமாறு;

நடிகர்கள் ஃபிட்
''ஆரோக்கியமாக இருப்பது குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமான ஒன்றாகும். நடிகர்கள் மட்டுமே ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது, அது உண்மையல்ல. சில வருடங்களுக்கு முன்பு வரை கல்லூரி தேர்வில் தேர்ச்சி பெறுவதே மாணவர்களின் இலக்காக இருந்தது. ஆனால், இப்போது போதைப் பழக்கம் இல்லாமல் கல்லூரியை விட்டு வெளியே வருவதே பெரிய சாதனையாகப் பார்க்கப்படும் நிலையில் இருக்கிறோம்."

ஆபத்தான போக்கு
''இது மிகவும் மிகவும் ஆபத்தான போக்காகும். நமது ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டு அல்லது உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் போதைப்பழக்கத்தில் இருந்து நாம் விலகி இருக்கலாம். நான் திரையில் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் உடல்நலனில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். என்னை போல மற்றவர்கள் தாமதமாகத் தொடங்குவதை நான் விரும்பவில்லை.''

மதுரையில் நிகழ்ச்சி
"இந்தியாவில் இருந்து ஏராளமானோர் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனர். தலைநகரில் மட்டும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதை நான் விரும்பவில்லை. எனவே முதல் நிகழ்ச்சி மதுரையில் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சிக்கு கிடைக்கும் வரவேற்பின் அடிப்படையில் மேலும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்தப் போட்டியில் பங்கேற்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 10 லட்சம் ரூபாய் வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும்''. இவ்வாறு அமீர் கூறினார்.












Click it and Unblock the Notifications