பெரிய கட்டடம் கட்டணுமா.. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கட்டாயம்.. புதிய உத்தரவின் முழுவிபரம்
சென்னை: தமிழகத்தில் 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிற்கு மேல் கட்டடம் கட்டினால் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சுற்றுச்சூழல் அனுமதியை பெற வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அனுமதி பெற வேண்டும் என்றால் கட்டட உரிமையாளர்கள் பல்வேறு நிபந்தனைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.
தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் உயரமான கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. புதிதாக கட்டடம் கட்ட வேண்டும் என்றால் முறையான அனுமதி பெற வேண்டியது கட்டாயமாகும்.
இந்நிலையில் தான் தற்போது 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேல் கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியது அவசியம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
திடீர் ஆய்வு நடத்துவோம்! மாட்டிக்கொள்ளாதீர்கள்! கடுமையாக எச்சரிக்கும் மாசு கட்டுப்பாட்டு வாரியம்!
அனுமதி அவசியம்
அதன்படி தமிழகத்தில் 20 ஆயிரம் சதுரமீட்டர் பரப்புக்கு மேல் கட்டப்படும் கட்டத்துக்கு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சுற்றுச்சூழல் அனுமதியை பெற வேண்டும். மேலும் தமிழகத்தில் 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில்நுட்ப பூங்காக்கள், வணிக வளாகங்கள் உள்பட அனைத்து உரிமையாளர்களும் அதற்கான அனுமதியை பெற வேண்டியது அவசியமாக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டடம் கட்டுபவர்கள் கட்டுமான பணிக்கு முன்பு தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியத்திடம் இசைவாணை கோரி விண்ணப்பம் செய்ய வேண்டும்.
இசைவாணை பெறுவது எப்படி?
ஒருவேளை கட்டடம் கட்டப்பட்டு பயனாளரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் குடியிருப்போர் நல சங்கங்கள் வாரியத்திடம் இசைவாணை பெற வேண்டும். வாரியம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து கட்டடம் செயல்படுவதற்கான இசைவாணையை வழங்கும். இந்த வாரிய நிபந்தனைகளாக பல அம்சங்கள் உள்ளன. இந்த நிபந்தனைகளின் ஒவ்வொன்றாக கீழே உள்ளன.
நிபந்தனைகள் என்னென்ன?
இந்த கட்டடங்களில் கண்டிப்பாக கழிவுநீர் சுத்திகரிப்பு அம்சங்கள் இருத்தல் வேண்டும். அதோடு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் மரங்கள், செடிகளுக்கு செல்ல வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை கண்காணிக்க கருவி பொருத்தி வாரியத்தின் நீர் தர கண்காணிப்பு மையத்துடன் இணைத்தல் உள்ளிட்ட நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். மேலும் மழைநீர் சேகரிப்பு வசதி இருத்தல், திடக்கழிவுகளை சேகரித்து முறையாக கையாளுதல், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்தல், அதோடு டீசல் ஜெனரேட்டர்களுக்கு ஒலி கட்டுப்பாட்டு கருவி தகுந்த ஒலி கட்டுப்பாடு கருவிகள் பொருத்துதல் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மீறினால் நடவடிக்கை என்ன?
இந்த நிபந்தனைகளை கட்டட உரிமையாளர்கள், நிறுவனத்தினர் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதனை உறுதி செய்யும் நோக்கில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு மேற்கொள்ளும். விதிமீறல் இருந்தால் கட்டடத்துக்கு சீல் வைக்கப்படுவதோடு உரிமையாளர்கள் மீது சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகை வசூலிக்கப்படும். அதோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். மேலும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரினை டேங்கர் லாரிகள் மூலம் எடுத்துச் சென்று சாலையோரங்களில் கொட்டினால் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.