நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை,. துணிந்து எதிர்ப்போம்.. ரெய்டுக்கு டிஆர் பாலு கண்டனம்
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினர் மீது வருமான வரி சோதனை நடத்துவது மத்திய பா.ஜ.க. அரசின் பழி வாங்கும் செயல் என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுகவின் கடைகோடித் தொண்டன்கூட அஞ்ச மாட்டான்; அடி பணியவும் மாட்டான். அடிமை அ.தி.மு.க.வினரைப் போல கூனிக்குறுகி, வளைந்து நெளிந்து ஊர்ந்து செல்லவும் மாட்டான் என்று காட்டமாக டிஆர் பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்பியுமான டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய மகள் வீட்டிலும் - அண்ணாநகர் தொகுதி கழக வேட்பாளர் எம்.கே.மோகன் வீட்டிலும் - கரூர் தொகுதி கழக வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி வீட்டிலும் வருமானவரித் துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, திருவண்ணாமலை தொகுதி கழக வேட்பாளர் எ.வ.வேலு வீட்டில் சோதனை நடத்தி, அங்கே 3.50 கோடி ரூபாய் கைப்பற்றியதாகப் பொய்யான ஒரு செய்தியைக் கசியவிட்டு, அதன் பின்னர் 'ஒன்றுமே கைப்பற்றப்படவில்லை' என்று கூறினார்கள். இப்படி திட்டமிட்டு, தி.மு.க.வினர்மீது களங்கம் சுமத்தி தேர்தல் ஆதாயம் அடைவதற்காக, மத்திய அரசின் வருமானவரித் துறை தவறாக, விதிகளை மீறி பா.ஜ.க.வால் பயன்படுத்தப்படுகிறது.
பொய்யாக களங்கம்
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், விதி-123, பிரிவு-7ன் கீழ் ஆளுங்கட்சி வேட்பாளர்கள் பயனடையும் வகையில், அரசு இயந்திரம் தவாறகப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதியை மீறி, மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தமிழகத்தில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் ஆதாயத்துக்காக தி.மு.க. வேட்பாளர்கள் மீதும் - கழகத் தலைமை மீதும், பொய்யாக களங்கம் சுமத்த முற்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதும் - தண்டனைக்குரியதும் ஆகும்.
தேர்தல் ஆணையத்தில் புகார்
வருமான வரித் துறையினரின் இந்தச் செயல் குறித்து, தலைமைத் தேர்தல் ஆணையர் அரோரா அவர்களிடம் புகார் தெரிவித்திட, தேர்தல் ஆணையத்தை தொடர்பு கொண்டபோது, அரோரா, வீடியோ கான்பிரசில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையர் அரோரா அவர்களை தொடர்பு கொள்ளும் போதோ அல்லது நேரில் சந்திக்கும்போது, தேர்தல் ஆணையம், அரசின் இந்த விதிமீறலை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும்; எவ்வித முகாந்திரமும் இல்லாமல் இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்"" புகார் தெரிவிக்க உள்ளேன்.
திரிணாமுல் காங். கண்டனம்
தி.மு.க. வேட்பாளர்கள் மீதும் - கழகத் தலைமை மீதும், வருமானவரித் துறையினரை ஏவி, கழகத்தின் மீது பொய்யாக களங்கத்தை சுமத்த மத்திய பா.ஜ.க. அரசு முயலுவதை, அகில இந்திய கட்சிகளின் தலைவர்களான அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் .ராகுல் காந்தி, எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சுசூரி, ஆர்.ஜே.டி. கட்சியின் தலைவர்களில் ஒருவரான தி மனோஜ் ஜா, எம்.பி., திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரிக் ஓபரின், எம்.பி., ஆகியோர் கண்டித்துள்ளனர்.
துணிந்து நிற்போம்
"மக்களிடம் ஆதரவில்லை; படுதோல்வி உறுதி என்ற நிலையில் வழக்கம் போல பாஜக தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது. மிரட்டலுக்கு பயந்து அடிமையாய் காலில் விழ நாங்கள் அதிமுக அல்ல! அச்சமில்லை! துணிந்து எதிர்ப்போம்! உங்கள் தப்புக்கணக்குக்கான தெளிவான பதிலை மக்களே ஏப்.6-இல் வழங்குவர்."என கழகத் தலைவர் அவர்கள் ட்விட்டர் வெளியிட்ட அறிக்கை போல, இது தந்தை பெரியார் உருவாக்கிய திராவிட தேசம் - அறிஞர் அண்ணா உருவாக்கிய தமிழ் தேசம் - முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய சமூகநீதி தமிழ் தேசம்.
நேர்கொண்ட பார்வை
கழகத் தலைவர் தளபதி அவர்கள் தலைமையில் இருக்கின்ற தி.மு.கழகத்தின் கடைகோடி தொண்டன்கூட கூனிக்குறுகி, வளைந்து நெளிந்து அடிமை அ.தி.மு.க.வினரைப் போல ஊர்ந்து செல்லமாட்டான். நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, எவருக்கும் அஞ்சாத துணிவோடு படை நடத்தும் எங்கள் தலைவர் - ஜனநாயகத்தின் தகதகாயமாய் ஒளிவீசி பிரகாசித்துக் கொண்டிருக்கும், நாளை தமிழகத்தின் தலைமையேற்க இருக்கும் தளபதி அவர்களுடைய தலைமையில் வெற்றிக் கொடி நாட்டுவான்" இவ்வாறு டிஆர் பாலு கூறியுள்ளார்.