சென்ட்ரல் டூ காட்பாடி.. ரயில் பயணிகளின் கவனத்திற்கு! இன்று முதல் முன்பதிவில்லா பெட்டிகள் குறைப்பு!
சென்னை: நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை 4-ல் இருந்து 2-ஆக குறைத்துள்ளது இந்தியன் ரயில்வே. அதன்படி சென்னையில் இருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாகச் செல்லும் ரயில்களின் முன்பதிவில்லாப் பெட்டிகள் இன்று முதல் குறைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
26 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்து, அதற்கு பதிலாக, AC 3 Tier பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கில் இந்தியன் ரயில்வே முதன்மையானது. இது ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 2.4 கோடி பயணிகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. இதில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் பங்களிப்பு அதிகமாகும். ஆனால் தெற்கு ரயில்வே, சுமார் 26 ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை குறைக்க உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது.
அதாவது கடந்த பிப்.15ம் தேதி இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (TNIE) செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது. இந்த உத்தரவின்படி,
சென்னை-மைசூரு காவேரி எக்ஸ்பிரஸ்
சென்னை-திருவனந்தபுரம் மெயில்
சென்னை சென்ட்ரல்-ஆலப்புழா சூப்பர்ஃபாஸ்ட் (SF) எக்ஸ்பிரஸ்
கொச்சுவேலி-நிலம்பூர் சாலை ராஜா ராணி எக்ஸ்பிரஸ்
எர்ணாகுளம்-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ்
என ஆகிய ஐந்து எக்ஸ்பிரஸ் ரயில்களில் 2 முன்பதிவில்லாத பெட்டிகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. இதில் மொத்தம் 4 முன்பதிவில்லாத பெட்டிகள் இருக்கும். தற்போது இரண்டு குறைக்கப்பட்டால், இன்னும் இரண்டுதான் இருக்கும். மட்டுமல்லாது,
சென்னை-ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ்
சென்னை சென்ட்ரல்-ஹைதராபாத் டெக்கான் எஸ்எஃப் எக்ஸ்பிரஸ்
சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் எஸ்எஃப் எக்ஸ்பிரஸ்
புதுச்சேரி-மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்
விழுப்புரம்-காரக்பூர் எஸ்எஃப் எக்ஸ்பிரஸ்
புதுச்சேரி-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்
சென்னை சென்ட்ரல்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் மற்றும்
திருநெல்வேலி-புருலியா எஸ்எஃப் எக்ஸ்பிரஸ்
என இந்த 8 ரயில்களில் மொத்தம் 4 முன்பதிவில்லா பெட்டிகள் இருக்கும். ஆனால் இந்த எண்ணிக்கை தற்போது 3 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது என்பதுதான் சிக்கல்.
2 முன்பதில்லா பெட்டிகளில் அதிகபட்சமாக 350 பேர் மட்டுமே பயணிக்க முடியும். ஆனால் 600-700 டிக்கெட்களை ரயில்வே துறை வழங்கி வருகிறது என TNIE தெரிவித்திருக்கிறது. இப்படி கண்ணை மூடிக்கொண்டு டிக்கெட் வழங்குவதால், சென்னை-ஜோலார்பேட்டை வழித்தடத்தில் பயணிகள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாவார்கள். விரைவில் டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலை போல, சென்னையிலும் ஏற்படும் என்று பயணிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதில் மற்றொரு அதிர்ச்சியான தகவல் என்னவெனில், முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 2022-2023ம் ஆண்டை விட, 2023-2024ம் ஆண்டில் 110% அதிகரித்திருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விவரங்களில் தெரிய வந்திருக்கிறது என TNIE கூறியிருந்தது என்பதுதான்.












Click it and Unblock the Notifications