கன்ஃபார்ம்.. 25 டூ 39.. சட்டுனு கணக்கை மாற்றிய அண்ணாமலை.. “கூட்டணி”? சொன்ன வார்த்தையை கவனிச்சீங்களா?
சென்னை : அதிமுக தலைவர்களின் பேச்சுகளும், அண்ணாமலையின் பேச்சும், பாஜக - அதிமுக கூட்டணி வரும் 2024 தேர்தலில் தொடருமா என்ற சந்தேகத்தை வலுப்படுத்தி இருந்த நிலையில், கூட்டணி உறுதி என கன்ஃபார்ம் செய்திருக்கிறார் அண்ணாமலை. 25 சீட்களை பாஜக வெல்லும் எனக் கூறி வந்த அண்ணாமலை, பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் அனைவருமே பிரதமர் மோடியைப் போன்றவர்கள் தான், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் பிரதமரே போட்டியிடுவதாக கருதி உழைப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜக - அதிமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன்தான் கூட்டணி. 39 தொகுதிகளிலும் கடுமையாக உழைத்து கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக, அதிமுக ஈபிஎஸ் அணியின் நிர்வாகிகள் - பாஜகவினர் இடையே வார்த்தை மோதல்கள் நடந்து வந்த நிலையில் அண்ணாமலை அதிமுகவை சீண்டாமல் சாஃப்ட்டாக பேசியுள்ளார்.

பாஜக - அதிமுக கூட்டணி
2019 நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் நீடித்தது பாஜக. அதன் மூலம் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன்பிறகு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும், கூட்டணி தொடர்வதாகவே பாஜக, அதிமுக இரு கட்சிகளும் கூறி வருகின்றன. எனினும், ஈபிஎஸ் அணியின் சில நிர்வாகிகள் பாஜக கூட்டணிக்கு எதிராகப் பேசி வருகின்றனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் வரும் தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று ஒரு இடத்திலும், தமிழ்நாட்டில் பாஜக 25 இடங்களில் வெல்லும் என்று மற்றொரு இடத்திலும் பேசி வருகிறார்.

கூட்டணியில் விரிசல்
அதிமுக தனித்து போட்டியிடவும் தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ உள்ளிட்ட பலரும் பேசினர். பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், உள்ளாட்சி தேர்தலைப் போன்று நாடாளுமன்ற தேர்தலிலும் 39 வேட்பாளர்களை தனியாக நிறுத்த எங்களால் முடியும் எனக் கூறினார். பாஜகவின் வளர்ச்சி அதிகரித்துள்ளதால் குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என அண்ணாமலை பேசி வருகிறார். அதிமுக கூட்டணியில் 25 தொகுதிகள் பாஜகவிற்கு கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதால், பாஜக தனித்து போட்டியிட விரும்புவதை அண்ணாமலை மறைமுகமாக வெளிப்படுத்தியதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பாஜக வேண்டாம்
மேலும், அதிமுகவின் பின்னால் நாம் செல்ல வேண்டிய தேவை இல்லை என்றும், தனித்து போட்டியிடும் அளவிற்கு நாம் வளர வேண்டும் என்றும் அண்ணாமலை பேசியது அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி உறவு குறித்த சந்தேகங்களை மேலும் வலுப்பெறச் செய்தது. ஈபிஎஸ் அணியின் முன்னணி நிர்வாகிகள் பலரும், பாஜக தங்களுடன் கூட்டணியில் இருப்பதால் சிறுபான்மையினரின் வாக்குகள் பறிபோகின்றன, அதனால் பாஜக கூட்டணி வேண்டாம் என எடப்பாடியிடம் கூறி வருவதாக தகவல்கள் வெளியாகின. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பல அதிமுக நிர்வாகிகள் பாஜகவையும் அண்ணாமலையும் விமர்சித்து மேடைகளில் பேசினர்.

தனித்து நிற்கத் தயங்க மாட்டோம்
இந்தக் கருத்துகளுக்கு மத்தியில் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்து நீடிக்குமா? அவ்வாறு நீடித்தால் அதற்கு யார் தலைமையாக இருப்பார்கள் என்ற குழப்பம் இரு கட்சி தொண்டர்களிடமும் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும், பாஜக மீண்டும் தனித்து நிற்கத் தயங்காது, தைரியம் இருந்தால் திமுக தனித்து நிற்கத் தயாரா என சவால் விடுத்திருந்தனர். இதனால், அதிமுக பாஜக கூட்டணி தொடர்வது சந்தேகம் தான் என்ற பேச்சுகள் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில், அதிமுகவுடன் கூட்டணி உறுதி என அண்ணாமலை மீண்டும் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவுடன்தான் கூட்டணி
சென்னையில் தமிழக பாஜக கலை, கலாசார பிரிவு சார்பில் தமிழ்த்தாய் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "தற்போது பாஜக - அதிமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன்தான் கூட்டணி. இந்த தேர்தலைப் பொறுத்தவரை தமிழ்நாடு பாஜக மிகவும் தெளிவாக உள்ளது. 39 தொகுதிகளிலும் கடுமையாக உழைத்து கட்சியைப் பலப்படுத்த வேண்டும். அனைத்து தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்பதே எங்களின் இலக்கு" எனத் தெரிவித்தார்.

39 சீட் - பிரதமர் மோடி
பிரதமர் மோடி தமிழ்நாட்டில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, பிரதமர் மோடி தமிழ்நாட்டில் போட்டியிடுவாரா என்பது குறித்து தெரியவில்லை. தொண்டர்கள் அனைவருக்கும் பிரதமர் தங்களது தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதே விருப்பம். ஆனால் கூட்டணி சார்பில் போட்டியிடும் அனைவருமே பிரதமர் மோடியைப் போன்றவர்கள் தான். அவரது ஆசியைப் பெற்றவர்கள் தான். வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாடு பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு மைல்கல்லாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

சந்தேகத்திற்கு விடை
கடந்த சில வாரங்களாக அண்ணாமலையின் பேச்சுகள், அதிமுக கூட்டணி இல்லை என்கிற ரீதியிலேயே இருந்தது. இந்நிலையில், அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்றும், 39 தொகுதிகளிலும் கடுமையாக உழைப்போம் என்றும் பேசியுள்ளார். பாஜக 25 சீட் என்ற கணக்கை விட்டுவிட்டு, கூட்டணி 39 சீட் என்ற கணக்கிற்கு அண்ணாமலை மாறியுள்ளதே, அதிமுக கூட்டணி உறுதி என்பதன் வெளிப்பாடு தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications