"கோல்டன்" வாய்ப்பு.. அந்த 8 மணி நேரம் என்ன நடந்தது? டெல்லியில் திமுகவின் மூவ்.. ஒரே குழப்பம்!
சென்னை: ஆளுநர் ஆர். என் ரவிக்கு எதிராக திமுக சார்பாக குடியரசுத் தலைவரிடம் கொடுக்கப்பட்ட மனு குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவி - முதல்வர் ஸ்டாலின் இடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ளது.ஆளுநர் ஆர். என் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆளும் திமுக சார்பாக முன்பே குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் பேசிய உரைக்கு எதிராகவும் தமிழ்நாடு ஆளும் திமுக சார்பாக எம்பிக்கள் குடியரசுத் தலைவர் முர்முவிடம் புகார் அளிக்கப்பட்டது.
மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் திமுக எம்.பி.க்கள் இந்த புகாரை வழங்கினர். இதில் வியப்பளிக்கும் விஷயம், அந்த புகாரோடு முதல்வர் ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம் ஒன்றும் இடம்பெற்று இருந்தது. ஆளுநர் சொந்த கருத்துக்களை பேசுவதாகவும், அரசியல்வாதி போல பேசுவதாகவும் இந்த கடிதத்தில் புகார் வைக்கப்பட்டு உள்ளது.
ஆளுநர் மாளிகை அதிரடி.. திமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக அவதூறு வழக்கு
கடிதம்
ஆளுநர் சொந்த கருத்துக்களை பேசுவதாகவும், அரசியல்வாதி போல பேசுவதாகவும் இந்த கடிதத்தில் புகார் வைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் ஜனவரி 9 அன்று ஆளுநர் உரையுடன் பேரவை கூட்டத் தொடர் துவங்கியது. இந்த உரைக்கான வரைவினை தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு முன்னதாகவே அனுப்பி அதற்கு அவரது ஒப்புதல்ஜனவரி 7 ல் பெறப்பட்டது. உரையினை இதனடிப்படையில், இந்த அச்சிட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அன்றைய தினம் சட்டசபையில் ஆளுநர் தனது உரையில் ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட வரைவு உரையிலிருந்த பல பகுதிகளைப் படிக்காமலும் உரையில் குறிப்பிடப்படாத பல புதிய கருத்துகளை இணைத்தும் உரையாற்றினார். சட்டசபையின் தொடக்க நாளில் அவர் நடந்து கொண்ட விதமும், சட்டமன்ற மாண்பினை அவமதிக்கும் வகையில் அவர் நடந்து கொண்டதும் காணப்படுகிறது. கவர்னர் உரை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அரசியல் சட்டப் பிரிவு 163 (1) -ன்படி கவர்னர் என்பவர் அமைச்சரவையின் வழிகாட்டுதல் மற்றும் நடக்கவேண்டுமென்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி அவர்கள் இதில் தலையிட்டு, தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி அவர்கள் இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி அமைச்சரவையின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகளின்படி நடப்பதை உறுதிசெய்யவும், அதன் மூலம் மக்களுக்கு மாநில அரசு சிறந்ததொரு நிர்வாகத்தை வழங்க வழிவகை செய்யவும், மக்களாட்சித் தத்துவம் செம்மையடையவும் அவருக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று கடிதத்தில் கேட்டுள்ளார்..
கடிதம்
இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூபிற்கு அளித்துள்ள பேட்டியில், குடியரசுத் தலைவரிடம் திமுக எம்பிக்கள் ஆளுநருக்கு எதிராக கொடுத்த மனு வீரியம் குறைந்த மனு. இதற்கு முன்பே திமுக சார்பாக ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டும் என்று திமுக நேரடியாக கோரிக்கைகளை வைத்து இருக்கிறது. நாடாளுமன்றத்திலும் தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் இந்த முறை குடியரசுத் தலைவரிடம் திமுக எம்பிக்கள் ஆளுநருக்கு எதிராக கொடுத்த மனுவில் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. இந்த முறை குடியரசுத் தலைவரே நேரடியாக திமுக எம்பிக்களை சந்திக்க நேரம் கொடுக்கிறார். குடியரசுத் தலைவர் சந்திக்க நேரம் கொடுத்தும் ஆளுநரை திரும்ப வேண்டும் என்று திமுக எம்பிக்கள் பழையபடி கோரிக்கை வைக்கவில்லை.
என்ன சொன்னார்?
சண்டை இவ்வளவு மோசமாகி இருக்கிறது. சட்டசபையில் நிலைமை கைமீறி சென்றுள்ளது. ஆனால் ஆளுநரை திரும்ப வேண்டும் என்று திமுக எம்பிக்கள் பழையபடி கோரிக்கை வைக்கவில்லை. மாறாக அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என்று அவருக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று மட்டுமே கோரிக்கை வைக்கின்றனர். அதோடு சீல் வைக்கப்பட்ட காப்பி ஒன்றையும் கொடுத்துள்ளனர். அதன்பின் 8 மணி நேரம் கழித்து திமுக சார்பாக அந்த சீல் செய்யப்பட்ட லெட்டரின் சாராம்சம் மட்டுமே வெளியானது.
8 மணி நேரம்
8 மணி நேரம் இதற்கு எடுத்துக்கொண்டனர். அந்த லெட்டரில் என்ன இருந்தது என்றெல்லாம் தெரியாது. அந்த லெட்டரில் இருந்த சாராம்சத்தை மட்டுமே இவர்கள் வெளியிட்டு உள்ளனர். இதன் அர்த்தம் என்னவென்றால் பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டில் கொஞ்சமே கொஞ்சமாக திமுக மென்மையான போக்கை கடைபிடிக்க தொடங்கி உள்ளது. அதனால்தான் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்த திமுக, நேரடியாக குடியரசுத் தலைவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தும், அந்த கோரிக்கையை இந்த முறை ஏன் வைக்கவில்லை? இதற்கு முன் குடியரசுத் தலைவரை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இந்த முறை கோல்டன் வாய்ப்பு கிடைத்தும் அதை தவறவிட்டுள்ளனர்.
ஆளுனர் ரவி
ஆளுநர் ரவி விதி மீறி இருக்கிறார். வரம்பு மீறி இருக்கிறார். கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிராக பேசி இருக்கிறார். ஆனால் அவருக்கு எதிராக மென்மையான கோரிக்கையையை மட்டுமே திமுக வைத்துள்ளது. ஆளுநர் செய்தது ஆக்சன். முதல்வர் செய்தது ரியாக்சன். முதல்வர் மீது தவறு இல்லை. ஆளுநர் அப்பட்டமாக அரசியல் சாசனத்தை மீறி, அரசியலமைப்பு சட்டத்தின், கூட்டாட்சியின் குரல்வளையை நெரித்து இருக்கிறார். இந்திய அரசியலமைப்பு சாசன நிபுணர்கள் ஆளுநரின் செயலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
என்ன நடந்தது?
அது ஆளுநர் உரை அல்ல. அரசாங்கத்தின் உரை. அந்த பிரிண்ட் செய்யப்பட்ட உரைக்கு எதிராக ஆளுநர் பேச முடியாது. அதில் இருக்கும் ஒரு புள்ளியை கூட ஆளுநர் மாற்ற முடியாது. அந்த உரைக்கு ஆளுநர் பொறுப்பு அல்ல. அந்த உரைக்கு அரசுதான் பொறுப்பு. அதனால்தான் அந்த உரை மீதான விவாதத்தில் முதல்வர் பதில் சொல்கிறார். அரசின் உரை என்பதால்தான் அந்த உரைக்கு அரசின் தலைவர் முதல்வர் பதில் சொல்கிறார். அதனால்தான் ஆளுநர் பதில் சொல்கிறார். இப்படிப்பட்ட உரையில் ஒரு பாராவை நான் படிக்க மாட்டேன் என்று அவர் சொல்வது என்ன ஒரு அராகஜம், என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.