இதுக்கெல்லாம் யார் காரணம் தெரியுமா... கமல் - திமுக கூட்டணியாமே.. 40 சீட்டாமே?
சென்னை: கமலை உதயநிதி சந்தித்து பேசியதாகவும், திமுக - மநீம கூட்டணி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன!
Recommended Video
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சமயம், கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்து வருகின்ன.. ஆனால், தேர்தலுக்கு இன்னும் நாள் உள்ளதால், இப்போதைக்கு மறைமுக பேச்சுவார்த்தைகளே நடந்து வருகின்றன... இது எல்லா கட்சிகளிலும் நடந்து வருகின்றது.
அந்த வகையில்தான் உதயநிதி - கமல் சந்திப்பு நடந்ததாக சொல்லப்படுகிறது.. உதயநிதியிடம் கமல் 40 சீட் கேட்டதாக சொல்கிறார்கள்.. அதற்கு அதிகபட்சமாக 25 சீட் தருகிறோம் என்று உதயநிதியும் சொன்னதாக தகவல்கள் கூறுகின்றன.
கமல் விளக்கம்
ஆனால், இதுகுறித்த கேள்விக்கு கமல் மறுப்பு தெரிவித்துள்ளார்.. "இப்போதைக்கு கூட்டணி தொடர்பாக, எந்த முடிவும் எடுக்க முடியாது... 'தேர்தல் கமிஷனிடம், டார்ச்லைட் சின்னம் பெறுவதிலும், நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.. திமுகவுடன் கூட்டணி அமையுமா என்பதற்கும் இப்போது சொல்ல முடியாது... ஊழலற்ற, நேர்மையான ஆட்சி அமைக்க, எங்களுடன் யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். 'மூன்றாவது அணி அமைந்தால், அதற்கு தலைமை ஏற்க தயார். ரஜினியுடன் வந்தாலும் தயார்" என்று தெரிவித்துள்ளார்.
சாத்தியமா?
எனினும், இந்த கூட்டணி எந்த அளவுக்கு சாத்தியம்? மநீம - திமுக ஒன்று சேர்ந்து பயணிக்குமா? என்பது குறித்த பல கேள்விகள் எழுகின்றன. கமல் கட்சியை ஆரம்பித்தது முதலே மக்கள் நீதி மய்யத்தை, திமுக பெரிதாக கண்டு கொள்ளவில்லை.. கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பு, அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து கமல் ஆசி பெற்றார். அப்போதும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
நீட் விவகாரம்
அதற்கு பிறகு, ஆளும் தரப்பை மட்டுமே குறி வைத்து விமர்சித்து வந்தார்.. அதையும் திமுக பெரிதுபடுத்தி பார்க்கவில்லை.. நீட் உள்ளிட்ட விவகாரங்களில் கமல் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு திமுகவுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார்... ஆனால், திமுகவினர் ஒருத்தரும் அதில் பங்கேற்கவில்லை. அதேபோல, அடுத்து சில நாட்களிலேயே நடந்த திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு, மக்கள் நீதி மய்யத்தை திமுக அழைக்கவில்லை. இந்த சமயத்தில்தான் எம்பி தேர்தல் நடந்தது.. ஓரளவு வாக்கையும் மநீம பெற்றது.. அதையும் திமுக கண்டுகொள்ளவில்லை.
ஐபேக் டீம்
இப்படிப்பட்ட சூழலில்தான், திமுக - மநீம கூட்டணி என்ற பேச்சுவார்த்தை கசிந்து வருகிறது.. இதற்கு 2 காரணங்கள் சொல்லப்படுகின்றன.. இந்த கூட்டணி அமைந்தால் நன்றாக இருக்கும் என்று அதற்கு அச்சாரம் போட்டதே திமுகவின் ஐபேக் டீம்தானாம்... கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்ததால், திமுக ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது... அதனால், இந்த முறை தேர்தலில், ஆட்சி அமைக்கும் வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதில் திமுக மிக கவனத்துடன் காய் நகர்த்தி வருகின்றது.
சீட்டுக்கள்
அந்த வகையில், காங்கிரஸை கூட்டணியில் வைத்திருப்பதால், போதுமான பலன் கிட்டாது என்பதை உணர்ந்தே கமலை உள்ளே இழுத்து போடும் முயற்சியை ஆரம்பித்ததாம். சென்ற முறையே 10 எம்பி சீட்டுக்களை லட்டு போல தூக்கி கொடுத்தும், காங்கிரஸ் பெரிதாக சோபிக்கவில்லை.. போதாக்குறைக்கு பீகார் தேர்தலில் மேலும் ஆட்டம் கண்டுவிட்டது.. அதனாலேயே காங்கிரஸை கழட்டிவிட, கமலுடன் பேச்சு தொடங்கி உள்ளதாக சொல்கிறார்கள்.
சீமான்
ஒருவேளை திமுகவுடன் கமல் கூட்டணி வைத்தால், என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பும் இங்கே எழுகிறது.. சில தினங்களாகவே சீமான் - கமலும் கூட்டணி வைக்க வாய்ப்பு என்றும் அதற்கான ஆரம்ப வேலைகளை இருவருமே தொடங்கிவிட்டனர் என்றும் சொல்லப்பட்டது. சீமானுக்கு திமுகவை கண்டாலே ஆகாது.. பாஜகவுக்கு அடுத்தபடியாக அவர் அதிகம் விமர்சிப்பது திமுகவைதான்.. அப்படி இருக்கும்போது, கமல் - சீமான் கூட்டணி இனியும் சாத்தியமாகுமா என்பது தெரியவில்லை.
ரஜினி
அதேபோல, ரஜினியின் முடிவு எப்படி இருக்கும் என்றும் விளங்கவில்லை.. ரஜினிக்கு தன்னுடைய ஆதரவை பலமுறை கமல் வெளிப்படையாகவே தந்துவிட்டார்.. ஈகோவை விட்டுவிட்டு, மக்களுக்காக ரஜினியுடன் இணைய தயார் என்றும் சொல்லிவிட்டார்.. நேற்றும் அதையேதான் கூறியிருக்கிறார்.. முன்பு ஒருமுறை ரஜினியும், "தேவைப்பட்டால் இணைவோம்" என்றும் ஒரு வார்த்தை சொல்லி இருந்தார்.
கேஎஸ் அழகிரி
இன்னொன்றையும் யோசிக்க வேண்டி உள்ளது.. கமலுக்கும் - காங்கிரசுக்கும் நல்ல புரிதல் உள்ளது.. இத்தனை நாட்களாக, கமல் 3வது அணி அமைத்தால், அவருடன் கூட்டணி வைக்கவும் காங்கிரஸ் யோசித்து வருவதாக சொல்லப்பட்டது.. கடந்த வருடம் கேஎஸ் அழகிரி, கமலுக்கு பகிரங்கமாகவே ஒரு அழைப்பு விடுத்திருந்தார்.. "கமல் தங்கள் கரத்தை வலுப்படுத்த வேண்டும் எனவும் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு கமல் வரவேண்டும் எனவும் சொல்லி இருந்தார்.. எனவே, கமலுக்கும் - தமிழக காங்கிரசுக்கும் ஒரு பிரச்சனையும் இல்லாத போது, கமல் காங்கிரஸை தவிர்த்துவிட்டு, திமுகவுடன் இணைவாரா என்ற ஐயமும் உள்ளது.
காங்கிரஸ்
ஒரு வேளை கமல்ஹாசன் திமுக கூட்டணியில் இணைவதாக இருந்தால் அது காங்கிரஸோடு சேர்ந்து கமல்ஹாசனும் திமுக கூட்டணியை வலுப்படுத்தும் வகையில்தான் இருக்குமே தவிர காங்கிரஸை துரத்தி விட்டு கமல் என்று இருக்காது என்றும் சொல்கிறார்கள்.
நங்கூரம்
ஆக மொத்தம், பரவி வரும் இந்த செய்தி உண்மையானால், திமுகவின் மாஸ்டர் ஸ்டிரோக்கில் இது ஒரு முக்கியமான திருப்பத்தை தரக்கூடும்.. எப்படியும் கமல் 3வது அணி அமைத்தால், நிச்சயம் திமுகவுக்கு வாக்குகள் பிரியும் என்ற சூழலில், கன கச்சிதமாக ஒரு நங்கூரத்தை பாய்ச்சியுள்ளது திமுக.. பார்க்கலாம்.. 'மய்யம்' திமுக பக்கம் சாயுமா என்பதை.