"மைனாரிட்டி".. ஆர்.என் ரவி கையில் எடுக்கும் "மாஸ்டர்பிளான்".. திமுகவை சமாளிக்க இப்படி ஒரு முடிவா?
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில் அவர் முக்கியமான நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக தரப்பிற்கும் - ஆளுநர் ஆர். என் ரவிக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. இரண்டு தரப்பிற்கும் நீட் தேர்வில் தொடங்கிய மோதல் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவில் வந்து நிற்கிறது.
முக்கியமாக ரம்மி விவகாரத்தில் இந்த மோதல் உச்சம் அடைந்துள்ளது. ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் அவசர சட்டம் தமிழ்நாட்டில் காலாவதியாகி உள்ளது. இந்த அவசர தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், அவர் இன்னும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

ஆன்லைன் மசோதா
ஆன்லைன் தடை சட்டத்தை ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு அனுப்பாத நிலையில் அந்த அவசர சட்டம் காலாவதி ஆகி உள்ளது. மசோதா இன்னும் நிலுவையில் உள்ளது. இன்னொரு பக்கம் சனாதனத்தை உயர்த்திப் பிடிப்பதாகவும், சமூக நல்லிணக்கத்தை உடைப்பதாகவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றன. முக்கியமாக இந்தியாவை இந்து நாடு என்று ஆளுநர் சொன்னதும், திராவிடம் என்பது மாயை, அது பிரிட்டிஷார் கொண்டு வந்த சொல் என்று ஆளுநர் சொன்னதும் சர்ச்சையானது.

இந்துத்துவா
ஆளுநர் தொடர்ந்து இந்துத்துவா குறித்தும், சனாதனம் குறித்தும் பேசுவதை ஆளும் திமுக தரப்பு கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டும். அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் திமுக சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. ஆளுநர் ஆர். என் ரவி பாஜக நிர்வாகி போல பேசுவதாகவும் , அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் செயல்படுவதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன. ஆளுநர் ஆர். என் ரவியை திரும்ப பெற வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கும் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் கடிதம் எழுதி உள்ளனர். அதேபோல் திமுக எம்பி வில்சன் ஆளுநர் ஆர். என் ரவியை திரும்ப பெற கூறி நாடாளுமன்றத்திலும் தனி நபர் மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.

முட்டல் மோதல்
திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் ஆரம்பத்தில் இருந்தே முட்டல் மோதல்கள் அதிகரித்தபடி இருக்கும் நிலையில், திராவிட மாடல் ஆட்சியை உயர்த்திப் பிடிக்கிறது திமுக தலைமை. இதற்கு போட்டியாக சனாதனத்தை தூக்கிப் பிடிக்கிறார் ஆளுநர். அவரின் இந்த கொள்கைகளை சமூக நல்லிணக்கத்துக்கு எதிரானதாக திமுக விமர்சித்து வரும் நிலையில், அதனை உடைத்தெறிய திட்டமிட்டு சில காரியங்களை அரங்கேற்றுகிறார் ஆளுநர் ஆர்.எ.ன்.ரவி. அதன்படி டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை. இதனை ராஜ்பவனில் விமர்சையாக கொண்டாட ஆளுநர் திட்டமிட்டுள்ளார்.

கிறிஸ்துவம்
கிறுஸ்துவ மதத்தைச் சேர்ந்த சுமார் 500 பிரமுகர்களை வரவழைத்து இந்த விழாவை கொண்டாடுகிறார் ஆளுநர். பல்வேறு பிரபலமான கிறிஸ்துவ பாஸ்டர்கள் இந்த நிகழ்விற்கு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதம், சென்னையில் உள்ள ஆற்காடு நவாப் இல்லத்திற்கு சென்று அவர் முஸ்லீம் மத பிரமுகர்கள் பலரையும் சந்தித்து உரையாடினார். அந்த சந்திப்பு அப்போதே உற்று நோக்கப்பட்டது. முஸ்லீம் மதத்தினரை தேடிச் சென்று எதற்கு இவர் பார்க்க வேண்டும் என்று சந்தேகத்தை எழுப்பின முஸ்லீம் அரசியல் கட்சிகள்.

பிரமுகர்
இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக, கிறுஸ்துவமத பிரமுகர்களை அழைத்து கிறுஸ்துமஸ் விழாவை கொண்டாடவிருக்கிறார் ஆளுநர். சனாதானத்தை மையமாக வைத்து தன்னை விமர்சிக்கு திராவிட கட்சிகளுக்கு பதிலடி கொடுப்பதற்காகவே இத்தகைய சம்பவங்களை அரங்கேற்றுகிறார் ஆளுநர் என்கிறார்கள் ராஜ்பவனுக்கு நெருக்கமானவர்கள். அதாவது இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என்று எல்லோருக்கும் நான் நெருக்கம்தான் என்று காட்டுவதற்காக ஆளுநர் ஆர். என் ரவி இப்படி செய்துள்ளதாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications